June 7, 2023

ஐ.நா.பொது சபையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த சினேகா தூபே!-

.நா. பொதுசபையில் இம்ரான்கான் சொன்னதற்கு அதிரடியாகவும், ஆதாரப்பூர்வமாகவும் பதிலடி கொடுத்த ஐ.நா.வில் இந்தியாவின் முதன்மை செயலாளராக பணியாற்றும் சினேகா தூபேவுக்கு பல தரப்பினருரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா., பொதுச்சபையின் 76வது கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உரை இடம்பெற்றது. அதில், ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, சையத் அலி ஷா கிலானியின் உடல் அடக்கம் உள்ளிட்டவை தொடர்பான கருத்துகள் இடம்பெற்றது.

இம்ரான் கானின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக , ஐ.நா.,வில் இந்தியாவின் முதன்மை செயலராக பணியாற்றும் சினேகா துாபே பேசியது இதுதான் :பாக்., பிரதமர் இந்தியாவின் உள் விவகாரங்களை ஐ.நா., பொதுச் சபையில் அவ்வப்போது பேசி இந்த மன்றத்தின் மாண்பை மீண்டும் குறைக்க முயற்சித்து உள்ளார். உலக அரங்கில் தொடர்ந்து இந்தியா குறித்து பொய்ச் செய்திகளை தெரிவித்து, உள்நோக்கத்துடன் களங்கம் கற்பிக்க முயற்சிக்கும் பாக்.,கிற்கு பதில் அளிக்கும் உரிமையை பயன்படுத்தி விளக்கம் அளிக்க விரும்புகிறேன். பாக்., பிரதமரின் இத்தகைய கருத்துக்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த கண்டனத்திற்கும் உரியவை. மீண்டும், மீண்டும் பொய் பேசி வரும் இந்த மனிதரின் மன நிலையை பார்க்க பரிதாபமாக உள்ளது. இந்த சபையில் உண்மை நிலையை விளக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு உள்ளது.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான் என பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் பயங்கரவாதம் என்ற தீயை அணைக்கும் போர்வையில், பயங்கரவாத தீயை துாண்டும் நாடாக பாக்., இரட்டை வேடம் போடுகிறது.அண்டை நாடுகளுக்கு மட்டும் தொல்லை கொடுப்பர் என்ற நம்பிக்கையில் பயங்கரவாதிகளை பாக்., வளர்த்து வருகிறது. பாக்.,கின் கொள்கைகளால் ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்படுகிறது. மறுபுறம், பாக்., உள்நாட்டு மதவெறி வன்முறையை, பயங்கரவாதச் செயல்கள் எனக் கூறி, மூடி மறைக்க முயற்சிக்கிறது.

ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள், இன்றும் என்றும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பிரிக்க முடியாத பகுதிகளாக தொடர்ந்து இருக்கும். இதில், பாக்., சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீரும் அடங்கும். அங்கு சட்ட விரோதமாக பாக்., ஆக்கிரமித்து உள்ள அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பாகிஸ்தான் வெளியேற வேண்டும். பாக்., பிரதமர், இந்தியாவுக்கு எதிரான பொய் பிரசாரத்திற்கு ஐ.நா., சபையை தவறாக பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. இது போன்ற பிரசாரங்களால், தான் ஒரு பயங்கரவாத ஆதரவு நாடு என்ற பழியில் இருந்து உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்ப பாக்., முயற்சிக்கிறது. ஆனால், அந்த முயற்சி ஒவ்வொன்றும் வீணாகிப் போவது தான் பரிதாபம்.

பாக்., உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் இயல்பான உறவுகளைப் பின்பற்றவே இந்தியா விரும்புகிறது. ஆனால் அதற்கான சூழலை உருவாக்கும் பொறுப்பு பாக்.,கிடம் தான் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை பாக்., எந்த வகையிலும் ஊக்குவிக்கக் கூடாது. பாக்., அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை, எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்த முடியாதபடி உறுதியான, நம்பகத்தன்மையுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியா மீது பொய்க் குற்றஞ்சாட்டி உலக அரங்கில் கேலிக்கு ஆளாவதற்கு முன், பாக்., குறைந்தபட்சம் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்”என்று அவர் பேசினார்.

இந்தியாவின் இளம் அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு பதிலளிப்பது இது முதல்முறை அல்ல. கடந்த 2016ம் ஆண்டில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதியாக சயித் அக்பரூதின் இருந்த காலத்திலேயே இது தொடங்கிவிட்டது. அப்போது இந்தியாவின் முதன்மை செயலாளராக இருந்த ஈனம் கம்பீர், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிஃப்க்கு பதிலளிக்கும் உரிமையை பயன்படுத்தி பேசியபோது, பாகிஸ்தான் போர் குற்றங்களை தங்களது கொள்கையாக கொண்டு செயல்படுத்தி வருகிறது. தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி வழங்கி வருவதாகவும் பேசினார். பின்னர் 2017ம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் அப்பாசி இந்தியா மீது பழி சுமத்தியது. இதற்கு பதிலளித்து பேசிய ஈனம் கம்பீர், பாகிஸ்தான் ஒசாமாவுக்கும் முல்லா ஓமருக்கும் அடைக்கலம் கொடுத்துவிட்டு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதாக சொல்வது நம்பும்படி இல்லை. உலக நாடுகள் அனத்திலுமே பாகிஸ்தான் என்பது பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள நாடு என தெரியும். பாகிஸ்தான் தற்போது டெரரிஸ்தான் ஆக மாறிவிட்டது என்று கூறியிருந்தார்.


இதேபோல் 2019ம் ஆண்டு ஐ.நா. பொதுக் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு பதிலளித்து பேசிய அப்போதைய இந்தியாவின் முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா, ஐ.நா.வால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட 135 பேர் பாகிஸ்தானில் உள்ளனர் என்றும் 25 முறை தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் அங்கு உள்ளன என்றும் குறிப்பிட்டார். 1971ல் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் இனபடுகொலை நடத்தியதாகவும் விமர்சித்திருந்தார். தற்போது அந்த வரிசையில் சினேகா தூபே தனது துணிச்சலான பேச்சு மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த வகையில் நேற்று அதிரடி காட்டிய சினேகா தூபே யார் என்று பலரும் விசாரித்தார்கள்

கோவாவைச் சேர்ந்த சினேகா துாபே, புனே பெர்குசன் கல்லுாரியில் எம்.ஏ., முடித்து, டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் எம்.பில்., பட்டம் பெற்றவர். கடந்த 2012ல், சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வில், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று, ஐ.எப்.எஸ்., ஆக தேர்வானார். சினேகா துாபே தான், அவர் குடும்பத்தின் முதல் சிவில் சர்வீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை பன்னாட்டு நிறுவனத்திலும், தாயார் ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்கள் ஆவார்கள்.

வெளியுறவு துறை அமைச்சகத்தில் பணியாற்றிய சினேகா துாபே, 2014ல், ஐரோப்பாவைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டில், இந்திய துாதரகத்தின் மூன்றாம் நிலை செயலராக நியமிக்கப்பட்டார். அதன் பின் ஐ.நா.,வில் இந்தியாவின் முதன்மைச் செயலராக பொறுப்பேற்றார். ஐ.நா., பொதுச் சபையில் பாக்., பிரதமர் இம்ரான்கானை விளாசித் தள்ளிய இவரது பேச்சு, உலகளாவிய ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாகவும், சமூக ஊடகங்களில் பலத்த பாராட்டுகளையும் பெற்றுள்ளது.