மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என ஶ்ரீகிருஷ்ணர் கீதையில் கூறியிருக்கிறார். மார்கழி மாதம் பீடுடைய மாதமாகும். (பீடு=பெருமை) . இம் மாதம் தேவர்களுக்கான அதிகாலை பொழுதாகும். மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பர்….தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை உத்ராயண புண்ணிய காலமாகும். அதாவது தேவர்கள் விழித்திருக்கும் காலம். எனவே மார்கழி என்பது தேவர்களுக்கு வைகறை பொழுதைப் போன்றது. மிகவும் சிறப்புடைய மாதம் மார்கழி. எனவே இந்த மாதம் முழுவதும் இறை வழிபாட்டிற்கு உகந்தது….!

தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழியைத் ‘தனுர் மாதம்” எனவும் அழைப்பர். இம்மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது மக்களின் வழக்கம். ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் உள்ளது….

எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாட்டைப் பக்தர்கள் இம்மாதத்தில் மேற்கொள்ளுகின்றனர். இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர்….

மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன. இம்மாதத்தில் மிருகசீரிட நட்சத்திரத்தில் ‘என்றும் பதினாறு வயது’ எனச் சிவபெருமானிடமிருந்து வரத்தைப் பெற்ற மார்க்கண்டேயர் பிறந்தார். எனவே மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. மிருத்யுஞ்ச ஹோமம் ( யமனைவெல்லும் வேள்வி) செய்ய இம்மாதம் சிறந்தது.

மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, அனும ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

🙏ஆருத்ரா தரிசனம்🙏

சிவபெருமானின் “ஆருத்ரா தரிசனம்” மார்கழியில் பௌர்ணமியை ஒட்டிய திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது ஆடலரசனான நடராஜருக்கு கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் அகானிவடிவாக நின்ற நாள் என்பதால் திருவாதிரை, சிவபெருமானுக்கு உரிய நட்சத்தகரமாகிறது;”ஆதிரையான்” என்று சிவனை அழைப்பர்.

இவ்விழாவைப் பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை சிதம்பரத்திலும், உத்திரகோசமங்கையிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது…

இவ்விழாவின்போது திருவாதிரைக்களியும், ஏழுகறிக்கூட்டும். சிவபெருமானுக்குப் படைக்கப்படுகின்றன. ‘திருவாதிரைக்கு ஒருவாய் களி’ என்பது இவ்விழா பற்றிய பழமொழியாகும்.
அன்றைய தினம் விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதம் சிவனுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இவ்விரத வழிபாடு மேற்கோள்வோர், நடனகலையில் சிறக்கலாம்.

🙏வைகுண்ட ஏகாதசி🙏

வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியில் திருமால் வழிபாடு மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. திருமாலை வழிபடும் விரதமுறைகளில் இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது இவ்விரதம் பற்றிய பழமொழியாகும்.இவ்விழாவில் சொர்க்கவாசல் திறப்பு என்பது முக்கிய நிகழ்சியாகும்.

வைகுண்ட ஏகாதசி அன்று திருமாலுக்குப் பிரியமின துளசி தீர்த்தத்தை மட்டுமே உட்கொண்டு பகல் மற்றும் இரவு வழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரத வழிபாடு வைகுந்த பதவி என்னும் மோட்சத்தைதா தரும். இந்நாளில் வைகுண்டத்தின் வாசல் திறந்தேயிருக்கும் என்றும், அன்று மரணிக்கின்ற உயிர்கள், நேரே வைகுண்டத்திற்குச் செல்லும்! என்பதும் ஐதீகம்.

🙏பாவை நோன்பு. 🙏

ஆயர்பாடியில் கோபியர்கள் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆற்றிற்குச் சென்று நீராடி மண்ணால் செய்த காத்யாணி தேவியை வழிபட்டு தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வழிபாடு நடத்தினர். பெண்கள் கடைப்பிடித்த விரதமானதால் இவ்விரதம், பாவை நோன்பு என்று வழங்கலாயிற்று.

பூமாதேவியின் அவதாரமான ஆண்டாள், பாவை நோன்பினை மேற்கொண்டு, அரங்கனை கணவனாக அடைந்தாள். ஆண்டாள் பாவை நோன்பின்போது நெய், பால் முதலியவற்றை உண்ணாமலும், கண்ணுக்கு மையிடாமல், தலையில் மலர் சூடாமல் புறஅழகில் நாட்டம் செலுத்தாமல் இறைநாட்டத்தில் மட்டும் மனதினைச் செலுத்தி பாவைநோன்பினை மேற்கொண்டாள்.

எனவே கன்னிப்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து நீராடி கோவிலுக்குச் சென்று ஆண்டாள் அருளிய திருப்பாவையைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர்.
திருமணமான பெண்களோ, மகிழ்ச்சியான மணவாழ்வு நீடிக்க வேண்டியும், குடும்ப நலன் வேண்டியும் இவ்விரத்தினை மேற்கொள்கின்றனர். பாவை நோன்பு 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

திருவெம்பாவை நோன்பு மாணிக்கவாசகர்

திருவெம்பாவை நோன்பு என்பது மார்கழியில் வரும் திருவாதிரைக்கு ஒன்பது நாட்களுக்கு முன்பு கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது திருவாதிரையோடு சேர்த்து விரத நாட்கள் மொத்தம் பத்து நாட்கள் ஆகும்.இந்நோன்பில் அதிகாலையில் எழுந்து நீராடி சிவகாமியுடன் கூடிய நடராஜரை வழிபடுவர். இவ்விரதத்தின்போது ஒரு வேளை அவித்த உணவினை மட்டுமே உண்பர்.

இவ்விரத்தினை பெரும்பாலும் கன்னிப்பெண்கள் கடைப்பிடிப்பர். இவ்விரதத்தின்போது மாணிக்கவாசகர் அருளிய ‘திருவெம்பாவை” பாடல்கள் பாடப்படுகின்றன. இவ்வழிபாட்டில் சிவபெருமானுக்குப் பிரியமான பிட்டு படைக்கப்படுகிறது. இதனால் இவ்வழிபாடு “பிட்டு வழிபாடு” என்று அழைக்கப்படுகிறது.

🙏முருகன் படி உற்சவம்🙏

ஆண்டுதோறும் டிசம்பர் 31-ந்தேதி மலைமேல் உள்ள முருகன் கோவில்களில் படி உற்சவம் என்ற விழா சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் குழுக்களாக மலைபடிக்களின் ஒவ்வொரு படியிலும் நின்று திருப்புகழ் பாடல்களைப் பாடுகின்றனர். (பக்தி whatsapp 9442705560) இவ்விழா அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் மிகவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

🙏விநாயகர் சஷ்டி விரதம்🙏

இவ்விரதம் கார்த்திகை மாதம் வளர்பிறை பிரதமை முதல் தொடங்கி மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் 21 இழைகளாலான காப்பினைக் கட்டிக் கொள்கின்றனர்….

முதல் 20 நாட்களும் ஒரு வேளை மட்டும் உணவினை உட்கொள்கின்றனர் விரதமிருப்போர் கடைசிநாள் முழுஉபவாசம் மேற்கொள்கின்றனர். விரதத்தின் நிறைவு நாள்அன்று பலவிதமான உணவுப்பொருட்களை தானமாகக் கொடுப்பர். இவ்விரதத்தின் பலனாக நல்ல வாழ்க்கைத்துணை, நற்புத்திரப்பேறு ஆகியன கிடைக்கும்.

🙏அனுமன் ஜெயந்தி🙏

மார்கழி மாதத்தில் மூலநட்சத்திரத்தோடு கூடிய அமாவாசை அன்று அனும ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனும ஜெயந்தியன்று விரதம் மேற்கொண்டு மன உறுதி, ஆற்றல், தைரியம் ஆகியவற்றை அருளுமாறு பிரார்த்தனை மேற் கொள்ளப்படுகிறது. கோயில்களில்
அனுமனிற்கு சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

🙏உற்பத்தி ஏகாதசி🙏

மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி “உற்பத்தி ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. இத்தினத்தில் விரதமுறை மேற்கொண்டு திருமாலை வழிபட சகல செலாவங்களும் கிடைக்கும்; எதிரிகளை வெல்லலாம்.

மார்கழி மாதத்தில் 63 நாயன்மார்களில்_ வாயில நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குருபூஜை நடத்தப்படுகின்றது.

பன்னிரு ஆழ்வார்களில் தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

இரமண மகிரிஷி, அன்னை சாரதா தேவியார், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் இம்மாதத்தில் பிறந்தவர்களாவர்.
மார்கழி மாதத்தில் வாசலில் கோலம் இட்டு சாணத்தைப் பிடித்து கோலத்தில் வைத்து, பிள்ளையாரரைப் போற்றி வழிபடுகின்றனர் மக்கள்.

தேவர்கள் இறைவனை துதித்து வழிபடும் மாதம் மார்கழி. இறைவனின் அம்சமாகவேயுள்ள மார்கழி மாதத்தில் பரம்பொருளின் எல்லா தெய்வ வடிவங்களும் போற்றப்படுகின்றன….

எனவே பீடுடைய மாதமான புனிதமான மார்கழியை மாதத்தை வரவேற்கப் பக்தர்கள் அனைவரும் தயாராவோம். மார்கழி மாதம் பிறக்க இருக்கின்றது. சூடிக் கொடுத்தச் சுடர்கொடியான ஆண்டாள் பாடிய திருப்பாவையையும், மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையையும் பாடி இறையருளைப் பெறுவோம்!

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!