உலக டவுன் சிண்ட்ரோம் (மனநலிவு) தினம்!

உலக டவுன் சிண்ட்ரோம் (மனநலிவு) தினம்!

நோய் எப்போதும் மனிதனின் பகுதியாகவே உள்ளது. டவுன் சிண்ட்ரோம் அல்லது மனநலிவு என்பது மனவளர்ச்சி குன்றியதைக் குறிப்பிடுகிறது. இந்த நோயானது மனித செல்லுக்குள், குரோமோசோமில் ஏற்படும் பிழையால் ஏற்படுகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா. பொதுச்சபை 2011ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் மார்ச் 21ஐ உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்தது.

அது சரி.. டவுன் சிண்ட்ரோம்’ -அப்படி என்றால் என்ன?

‘டவுண் சிண்ட்ரோம்’ அதாவது மன நலிவு ஒரு நோயல்ல; குறைபாடு. இவர்களை, மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள் என்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அது தவறு… இது, மரபணு கோளாறால் ஏற்படுகிறது. மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றால், அவர்களும் மற்றவர்களைப் போல், ஓரளவு இயல்பாக செயலாற்ற முடியும்.

இக் குறைபாடு உள்ள குழந்தைகள் எவ்வாறு இருப்பர்?

தட்டையான முகம், சரிவான நெற்றி, கண்கள் மேல்நோக்கிச் சாய்ந்திருத்தல், தட்டையான சிறிய மூக்கு போன்ற அடையாளங்களுடன் இருப்பர். மேலும் கைவிரல்கள் குட்டையாகவும், கைகளில் மூன்று ரேகைக்கு பதில் ஒரு ரேகையுடன் இருப்பர்.

என்னதான் காரணம்?

பொதுவாக, உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லிலும், மரபுப் பண்புகளை உள்ளடக்கிய குரோமோசோம்கள் இருக்கும். வலைப்பின்னல் அமைப்பில் இருக்கும். இவை, ஒவ்வொரு செல்லிலும், 23 ஜோடி என்ற எண்ணிக்கையில் அமைந்திருக்கும். கரு உருவாக்கத்தில், தாய், தந்தையிடம் இருந்து பெறப்படும், 23 குரோமோசோம்கள் இணைந்து, புதிதாக, 23 ஜோடி குரோமோசோம் அமைப்பு உருவாகும். இந்த குரோமோசோம் இணைவின்போது, தாய் அல்லது தந்தையிடம் இருந்து பெறப்படும், 21-வது குரோமோசோமுடன், அதன் நகலும் கூடுதலாகச் சேர்ந்துவிடும். இதனால், 46 குரோமோசோம்களுக்குப் பதிலாக, ஒவ்வொரு செல்லிலும், 47 குரோமோசோம்கள் இருக்கும். குரோமோசோம்களின் இந்தப் பிறழ்வு தான், டவுண் சிண்ட்ரோம். இந்தக் குறைபாடு உடைய குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியில் மந்தத்தன்மை இருக்கும் என்பதால்தான், தமிழில் இது, ‘மன நலிவு’ எனப்படுகிறது.

எப்படி கண்டறிவது?

இவர்களுக்கு, இயல்பான தசை உறுதி குறைந்து, தளர்வாக இருக்கும். பிறக்கும்போது எடை குறைவாகவும், உடல் நீளமாகவும் இருக்கும். தலை, காது, வாய் போன்ற உறுப்புகள் வழக்கத்தை விட சிறிதாக இருக்கும். காதுகள் வளைந்தும், நாக்கு துருத்திக் கொண்டும் காணப்படும்.

டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி சீரானதாக இருக்காது என்கின்றனரே?

உண்மை தான்! இவர்களின் உடல், மன வளர்ச்சி, மற்ற குழந்தைகளைவிட குறைவாகவே இருக்கும். இந்தக் குழந்தைகள் தவழ்வது, உட்காருவது போன்றவற்றைச் செய்ய, மற்றக் குழந்தைகளைவிட இரண்டு மடங்கு அதிக காலம் எடுத்துக் கொள்வர்.

பரிசோதனை முறைகள்?

டி.என்.ஏ., பரிசோதனையுடன் இணைந்த கூட்டுப் பரிசோதனை மூலம், குழந்தைக்கு மன நலிவு இருப்பதைக் கருவிலேயே உறுதி செய்யலாம். ரத்தப் பரிசோதனையில், தாயின் ரத்த மாதிரி பரிசோதித்து அறியப்படும். மீயொலி பரிசோதனை மூலம், குழந்தையின் பின் கழுத்து பகுதி ஆராயப்படும். அங்கே இயல்புக்கு மாறான தன்மையும், அதிக அளவில் திரவமும் இருந்தால், குழந்தைக்கு மன நலிவு இருப்பது உறுதி செய்யப்படும்.

சிகிச்சை முறைகள் என்னவாம்?

மன நலிவு குறைபாட்டை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றாலும், துவக்க நிலையிலேயே கண்டறிந்தால், குழந்தையின் வளர்ச்சியிலும், செயல்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். புலன் உணர்வு, உடலியக்கச் செயல்பாடு, அறிவாற்றல் ஆகியவற்றில், நல்ல மாற்றங்களை உருவாக்க முடியும். இதற்கென தனியாகப் பயிற்சியளித்தால், அடிப்படை வேலைகளுக்கு, குழந்தை பிறரைச் சாராமல் இருக்க முடியும். இதற்கிடையே மருத்துவக் கண்காணிப்பும் அவசியம்.

டவுன் சிண்ட்ரோம் உள்ள குழந்தைகளுக்கு வேறு என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

இதயக் கோளாறுகள், நாளமில்லாச் சுரப்பிக் குறைபாடு, நரம்பியல் சிக்கல் ஏற்படும். இதோடு, 40 வயதுக்கும் மேல் அல்சைமர் அதாவது மறதி நோய் ஏற்படும். நூறில் ஒருவருக்கு ரத்தப் புற்றுநோய் வரலாம்.

தவிர்க்க வழியில்லையா?

இது, மரபணு சார்ந்த குறைபாடு என்பதால், அதை முன்கூட்டியே கண்டறிந்து தவிர்க்க முடியாது. 45 வயதில் கருவுறும், 30 பெண்களில் ஒருவருக்கு, மன நலிவுடன் குழந்தை பிறப்பதற்கான சாத்தியம் அதிகம். அதேபோல், முதல் குழந்தை மன நலிவு குறைபாட்டுடன் இருந்தால், அடுத்த குழந்தைக்கும் அந்தப் பாதிப்பு ஏற்படக்கூடும்.

பொது வாழ்க்கை சாத்தியமா?

இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள், பொதுப் பள்ளிகளில் படித்து, தங்கள் வாழ்க்கைப் பாதையை நல்லவிதமாக அமைத்துக் கொண்டிருக்கின்றனர். அதனால், மன நலிவு குறித்து பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை

ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!