குட்கா விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்கறதுதான் சரி – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

நம் தமிழ்நாட்டில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டிலிருந்து உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் குட்கா, பான் மசாலா ஆகிய புகையிலை சார்ந்த பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால் சட்டவிரோதமாக குட்கா விற்பனை நடைபெற்று வருகிறது.
அண்மையில் தமிழக காவல் துறை உயரதிகாரிகள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றனர் என வருமான வரித்துறையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது. இதனிடையே அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக எம்எல்ஏ அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. இந்த விசாரணையின்போது, இவ்வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஆனால் குட்கா விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தமிழக அரசு வாதிட்டது. இதைத் தொடர்ந்து குட்கா விவகாரத்தில் தமிழக டிஜிபியும், சிபிஐயும் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.