June 9, 2023

ஆண்டுக்கு ஆறேழு தமிழ் படங்கள் தயாரிக்க விரும்பும் ஜான் சுதிர்!

இந்திய விவசாய பொருட்களை உலக சந்தைப் படுத்துதல் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை நடத்தி வருபவர் ஜான்சுதிர். சமீப காலமாக நட்பு ரீதியாக பல படங்கள் வளர்வதற்கு உதவிகரமாக இருந்திருக்கிறார்.அதிலும் 2௦13 ம் வருடம் தனது நண்பர் ஒருவரின் வளர்ச்சிக்காக சுமந்த் நடிக்க “ ஏமோ குர்ரம் எகரா வச்சு “ என்ற படத்தை தெலுங்கில் தயாரித்தத்தின் மூலம் தயாரிப்பாளராக நேரடியாக களத்தில் இறங்கினார். அதற்கு பிறகு ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனத்தை துவங்கி விக்கி டோனர் என்ற ஹிந்தி படத்தை தெலுங்கில் சுமந்தை வைத்து ரீமேக் செய்தார்.

cine may 13

படைப்புலகில் சிறந்த கலைஞர்களை கொண்டிருக்கும் தமிழ் திரையுலகின் மீது அதிக ஆர்வம் உண்டு என்பதால் தமிழ் படங்களை தயாரிக்க முடிவு செய்தார். அதன் படி ரவிபார்கவன் இயக்கத்தில் பரத் நடிக்க “ கடைசிபென்ச் கார்த்தி “ என்ற பெயரில் தமிழிலும் “ மல்லி பிரேமிஸ்தே “ என்ற பெயரில் தெலுங்கிலும் தயாரித்து வருகிறார். தெலுங்கில் பரத் நேரடியாக கால் பதிக்கும் படம் இது.

உலகம் முழுவதும் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் சகோதரர் எஸ்.எஸ்.காஞ்சி இயக்கத்தில், மரகதமணி இசையில் “ ஷோ டைம் “ என்ற பெயரில் தெலுங்கிலும், “ காட்சி நேரம் “ என்ற பெயரில் தமிழிலும் தயாரித்து வருகிறார்.

அடுத்ததாக மஞ்சு விஷ்ணு நடிக்க, கார்த்திக் இயக்கத்தில், எஸ்.எஸ்.தமன் இசையமைக்க ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் தமிழ் , தெலுங்கில் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார். அதன் துவக்க விழா விரைவில் நடைபெற உள்ளது. இதை தவிர தென்னகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற “ காஞ்சனா 2 “ படத்தின் கொரியா, சைனா, தாய்லாந்த், ஜப்பான் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கி இருக்கிறார். ஒரு தென்னிந்திய படத்தை உலக அளவில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியிருக்கும் முதல் தயாரிப்பாளர் இவர்தான்.

உலக நாடுகளில் உள்ள அனைத்து மொழிகளிலும் படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஜான்சுதிர். இந்திய கலைஞர்களை கொண்டு வெளி நாடுகளிலும், வெளிநாடுகளில் உள்ள கலைஞர்களை இந்தியாவிலும் பயன்படுத்தி படங்களை தயாரிக்க உள்ளார். ஜாக்கிஜான், டோனிஜா ஆகியோருக்கு ஜான்சுதிர் நெருங்கிய நண்பர் என்பதும் ஆண்டுக்கு ஆறேழு தமிழ் படங்கள் தயாரிக்க முடிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.