ஜியோ நிறுவனம் 4ஜி சிம் வசதி கொண்ட லேப்டாப்களை வழங்கப் போகுது?
தற்போதைய இந்திய இணைய மார்க்கெட்டில் படு ஸ்பீடாக உள்ள ரிலையன்ஸ் ஜியோவின் விற்பனைப் பட்டியலில் 4ஜி ஸ்மார்ட் போன்கள் இணைய வைஃபை சேவை உள்ளிட்டவை ஏற்கனவே உள்ளன. சமீபத்திய தகவலின் படி வைஃபை இணைய வசதியுடன் கூடிய 50 லட்சம் லேப்டாப்புகள் ஆண்டுதோறும் விற்கப்படுகின்றன. ஆனால் இணைய வசதிகள் கொண்ட சிம் கார்டுடன் லேப்டாப்புகள் விற்கப்பட்டால் அதற்கான சந்தை வாய்ப்பு பெரிய வரவேற்புடன் இருக்கும் என்று ஒரு தகவல் வந்த இரண்டே நாளில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 4ஜி சிம் வசதி கொண்ட லேப்டாப்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜியோ சேவைகள் துவங்கிய சில மாதங்களில் அந்நிறுவனம் பிராட்பேண்ட் மற்றும் டிடிஹெச் உள்ளிட்ட துறைகளில் கால்பதிக்க இருப்பதாக கூறப்பட்டது. பின் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளின் சோதனை தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் துவங்கியது. இதைத் தொடர்ந்து ஜியோ டிடிஹெச் சேவையும் நடந்து வருகிறதாம் .
இந்நிலையில்தான் 4ஜி சிம் ஸ்லாட் கொண்ட புதிய லேப்டாப்பை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து லேப்டாப்களை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஜியோ நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. ஏற்கனவே பீச்சர் போனுக்காக குவால்காம் – ஜியோ நிறுவனங்கள இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த லேப்டாப்கள் விண்டோஸ் 10 இயங்குதளம் மற்றும் பில்ட்-இன் செல்லுலார் கனெக்ஷன்ளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே குவால்காம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து 4ஜி ஃபீச்சர்போனிற்கென பணியாற்றி வருகின்றன. அது குறித்து ‘ஏற்கனவே ஜியோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். அவர்கள் எங்களின் சாதனத்தை எடுத்து கொண்டு, அதில் டேட்டா மற்றும் தகவல்களை வழங்கலாம்.’ என குவால்காம் டெக்னாலஜீஸ் நிறுவன மூத்த தலைவர் மிக்யூல் நியூன்ஸ் தெரிவித்துள்ளார்.
இத்துடன் குவால்காம் சார்பில் ஸ்மார்ட்ரான் நிறுவனத்துடன் இணைந்து ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் சார்ந்து இயங்கும் லேப்டாப்களை உருவாக்கவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது என்றாலும் வழக்கம் போல் புதிய லேப்டாப் உருவாக்கப்பட்டு வருவது குறித்து ஜியோ சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது