பெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.! திருநங்கைகளுக்கும் பொருந்தும்.!

ஆன்லைன் உணவு டெலிவரியில் முக்கிய நிறுவனமாக திகழும் ஜொமேட்டோ நிறுவனம், ‘தங்களிடம் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, ஆண்டுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு வழங்கப்படும்’ என, அறிவித்துள்ளது. ‘ஊழியர்களுக்கு பணிபுரியும் இடத்தில் பணிக் கலாச்சாரத்தை முழுமையாகக் கிடைக்க வேண்டும்’ என்பதால் இந்த விடுப்பை அறிமுகப் படுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த விடுப்பு, பெண்களுக்கு மட்டுமல்ல தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் திருநங்கைகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிச்சிருக்குது.
கேரளாவில் இரு தனியார் தொலைக்காட்சி சேனல்கள், சில பள்ளிக்கூடங்கள் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பை 1 முதல் 3 நாட்கள் வரை அறிவித்திருக்கும் நிலையில் இதுகுறித்து ஜொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபிந்தர் கோயல் தனது பிளாக்கில் பதிவிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிச்சிருக்கறது இதுதான்
“ஜொமேட்டோ நிறுவனத்தில், நம்பிக்கை, ஏற்றுக்கொள்ளுதல், உண்மை போன்ற கலாச்சாரத்தை வளர்க்க விரும்புகிறோம். அதன்படி ஜொமேட்டோ நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துப் பெண்கள், திருநங்கைகளுக்கு இன்று முதல் ஆண்டுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு வழங்கப்படும்.
எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் மாதவிடாய் கால விடுப்புக்கு பெண் ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். நீங்கள் பணியாற்றும் இடத்தில், குழுவிடம் நான் மாதவிடாய் விடுப்பு எடுத்திருக்கிறேன் என்று தயக்கமில்லாமல் தொலைப்பேசி மூலமோ அல்லது மின் அஞ்சல் மூலமோ கூறுங்கள்.
நம்முடைய பெண் ஊழியர்கள் மாதவிடாய் விடுப்பு எடுப்பதாகக் கூறும்போது, சங்கடமான சூழலை ஏற்படுத்தும் வகையில் ஆண் ஊழியர்கள் நடந்து கொள்ளக்கூடாது.பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் எவ்வாறு வேதனையுள்ளதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஜொமேட்டோ நிறுவனத்தில் உண்மையான கூட்டுக் கலாச்சாரத்தைக் கட்டமைக்க விரும்பினால், அவர்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும்”.
இவ்வாறு கோயல் தெரிவித்துள்ளார்.