ஆரோக்கியமும் கொடுக்கும் தினை பாயாசம்!

ஆரோக்கியமும் கொடுக்கும் தினை பாயாசம்!

சிறு தானியங்களுள் ஒன்று தான் தினை. ஆமாமுங்கோ.. நம்மைச் சுற்றி வளரும் சின்னஞ்சிறு செடி கொடிகள் முதல், பெரிய மரங்கள் வரை, மருத்துவ குணங்கள் நிறைந்தவை. தானிய வகைகளில், தினையும் புனிதத்துவம் பெற்றது. தினை, இந்தியாவில் பயிராகும், ஒருவகை உணவுப் பொருளாகும்; இனிப்புச் சுவை கொண்டது. உடலை வலுவாக்கும், சிறுநீர் பெருக்கும் தன்மைகள் உண்டு. வாயு நோயையும், கபத்தையும் போக்கும். ஆயினும் தீக்குற்றத்தைப் பெருக்கி, பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.  தினையரிசி உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். சாதம் வலிமையை பெருக்கும், வாயுவைப் போக்கும், கஞ்சி வீக்கங்களை ஒழிக்கும். இதன் அரிசியை சிலர் சமைத்து உணவாக கொள்வர். இது வெப்பத்தை உண்டு பண்ணும். எனினும், உடலை காக்கும் தன்மையுடையது. பண்டைக்காலத்திலிருந்தே, தினை உணவு தானியமாக பயிரிடப்பட்டு வருகின்றது. உமி நீக்கிய தினை உணவாகிறது. இதனை களியாகவும், கஞ்சியாகவும் செய்து சாப்பிடுகின்றனர். மாவாக அரைத்து சூடான பால் சேர்த்து, உடல் தளர்ச்சியடைந்தவர்களுக்கு கொடுக்கின்றார்கள். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே, இதனை முறுக்கு செய்யவும், தேனுடன் கலந்து சாப்பிட்டும் வந்துள்ளனர்.

இத்தகைய தினையைக் கொண்டு பாயாசம் செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

அரிசியைக் கொண்டு செய்யும் அனைத்து பலகாரங்களிலும் பாதி பாதி அரிசியும், தினை/சாமை/வரகு/ குதிரைவாலி/காடைக் கண்ணி போன்ற சிறுதானிய அரிசியை உபயோகித்தால் மிக அருமையான ருசி கிடைக்கும்….

இந்தத் தினை சாமை போன்றவைகள் தற்காலம் எல்லா ஆர்கானிக் கடைகளிலும் கிடைக்கிறது. விலை சுமார் ₹60 அரை கிலோவிற்கு.

என்னென்ன பலகாரங்கள் சிறு தானிய அரிசி வகைகளைக் கொண்டு செய்யலாம் என, கீழே பட்டியல் தந்துள்ளேன்….

சிறு தானிய பலகாரங்கள் செய்யும்போது, மறக்காமல் செக்கு கடலை எண்ணெய் அல்லது நல் லெண்ணெய் உபயோகிக்க வேண்டும்…. இந்தக் காம்போவில் கிடைக்கும் ருசி உலகில் எங்கும் கிடையாது! வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த ராஜ ருசிக்களை, அனுபவித்துப் பார்க்க முயலுங்கள்!

தினை முறுக்கு (ரெசிபி அப்புறம் வருது)

சாமை பக்கோடா,

தினை பக்கோடா

தினை, வரகு, சாமை தட்டை (நிப்பட்)

வரகு-கடலை மாவு முறுக்கு

50/50 சாமை-கடலை மாவு பஜ்ஜி

தினை கடலை மாவு வெங்காய போண்டா

தினை/சாமை பணியாரம்….

தினை பொங்கல்

தினை சாமை உப்புமா

சொல்லிக் கொண்டே போகலாம்!

மறக்காதீர்கள், அன்றைய ராஜாக்கள் உண்ட உணவு இவைகள்… பல பாடல்களில் தமிழ்ப் புலவர்கள் எழுதி வைத்துள்ளனர்…

கோபுர கலசங்களில் இன்றும் வைக்கப் படும் புராதன தானியங்கள் சிறு தானியங்களே! இவை காலத்தால் அழிவதில்லை!

இனி!..

தினை பாயாசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்….

செய்து சுவைத்துப் பார்த்து கமெண்ட் போடுங்கள், ஃபோட்டோவுடன்!

செய்முறை:

தினை – 1/2 கப்
வெல்லம் – 3/4 கப்
காய்ச்சி குளிர வைத்த பால் – 1/2 கப்
நெய் – 1 1/2 டீஸ்பூன்
முந்திரி – 1 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
தேங்காய் துருவல் 3 ஸ்பூன்

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், திணையை சேர்த்து பொன்னிறமாகவும், நன்கு மணம் வரும் வரை வறுத்து, பின் அதில் நீரை ஊற்றி, மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.

மற்றொரு அடுப்பில் நெய்யில் முந்திரி மற்றும் துருவிய தேங்காயை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் தட்டிப் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி கரண்டி பயன்படுத்தி வெல்லத்தை கரைத்து, முடிந்தால் வடிகட்டிக் கொள்ளுங்கள்!….

பின்பு வெல்லத்தை ஒரு வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து, 3 நிமிடம் வரை மீடியம் தீயில் கொதிக்க விட வேண்டும்.

வெல்ல நீர் ஓரளவு கெட்டியாகும் போது, அதில் வேக வைத்துள்ள திணையை சேர்த்து கட்டி தட்டாதவாறு 3 நிமிடம் தொடர்ந்து கிளறுங்கள்!….

அடுத்து, ஏலக்காய் பொடி, பால் சேர்த்து கிளறி, பின் வறுத்து வைத்துள்ள முந்திரி, தேங்காயை சேர்த்து கிளறி இறக்கவும்!…

இதோ தினை பாயாசம் தயார்!

டயட் குரூப்பில் உள்ளவர்களுக்கு இந்த வார போனஸ்… நீங்கள் அரை கப் சாப்பிடலாம்!

-டிமிட்த் பெட்கோவ்ஸ்கி!

error: Content is protected !!