2021 ஜூன் வரை வீட்டிலிருந்தே பணி – கூகுள் அறிவிப்பு
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தங்கள் ஊழியர்கள் அடுத்த ஆண்டு ஜூன் மாத இறுதி வரை வீட்டிலிருந்தபடியே பணியாற்றலாம் என தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அந்நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தலைமையில் நடைபெற்ற உயர் நிர்வாகிகள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதை அடுத்து , வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பல் வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை, வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதித்தன. ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. இதையடுத்து முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், உலகம் முழுவதும் கூகுள் ஆல்பபெட் நிறுவனத்தின் ஊழியர்கள் இந்தாண்டு முழுவதும் வீட்டிலிருந்தே பணியாற்ற கடந்த ஏப்ரல் மாதம் அனுமதி அளித்தது.
இந்நிலையில் கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது பணியாளர்களால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு, வீட்டிலிருந்தே பணியாற்றும் காலத்தை வரும் 2021 ம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூகுள் ஆல்பபெட் நிறுவனம் தனது ஊழியர் களுக்கு இ.மெயில் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.