வண்டலூர் உள்ளிட்ட தமிழகத்திலுள்ள முக்கிய பூங்காக்களில் இன்று முதல் கட்டண உயர்வு அமல் – சுற்றுலா பயணிகள் ஆதங்கம்!

வண்டலூர் உள்ளிட்ட தமிழகத்திலுள்ள முக்கிய பூங்காக்களில் இன்று முதல் கட்டண உயர்வு அமல் – சுற்றுலா பயணிகள் ஆதங்கம்!

மிழகத்தில் மிகப் பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்காக்களில் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்றாகும். இந்த பூங்கா அதன் அறிவியல் மேலாண்மை நடைமுறைகளுக்குப் பெயர் பெற்றது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் 2022 ஆம் ஆண்டில் பெரிய மிருகக்காட்சி சாலை பிரிவில் அதிக மேலாண்மை செயல்திறன் மதிப்பீட்டு மதிப்பெண்களுடன் இந்த பூங்கா நாட்டிலேயே ‘சிறந்த மிருகக்காட்சி சாலை’ என மதிப்பிடப்பட்டது. தற்போது, பூங்காவில் 170 வகைகளைச் சேர்ந்த 1977 வன விலங்குகள் உள்ளன. இந்த உயிரியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா ஆகியவை தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட நான்கு உயிரியல் பூங்காக்களும் பார்வையாளர்களிடமிருந்து பெறப்படும் நுழைவுக் கட்டண வருவாயின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகள், பறவைகள் போன்றவற்றை பராமரிப்பதற்கும், பார்வையாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டும் நுழைவுக் கட்டணத்தை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இந்த கட்டண உயர்வு தற்போது அமலுக்கு வந்துள்ளது.

பூங்காவிற்கான கட்டண உயர்வு குறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் இலவச நுழைவுக் கட்டண சலுகை தொடர்கிறது. 5 வயது முதல் 12 வயது வரையிலும் மற்றும் 13 வயது முதல் 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணமாக 20 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படும்.

இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கும் ஏற்கெனவே உள்ள இருவேறு கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டு ஒரே மாதிரியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள சக்கர நாற்காலிக்கான கட்டணம் ரூபாய் 25 ரத்து செய்யப்படுகிறது. சைக்கிள் மற்றும் ரிக்சாவுக்கு நிறுத்துமிடக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. டைம் ஸ்லாட் நிறுத்துமிடக் கட்டண முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வேன், டெம்போ பயணிகள், மினி பேருந்து மற்றும் பேருந்துகளுக்கான நிறுத்தக் கட்டணம் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவுக் கட்டணம் ரூபாய் 115லிருந்து ரூபாய் 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனக் கட்டணம் ரூபாய் 100லிருந்து ரூபாய் 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சஃபாரி வாகனக் கட்டணம் ரூபாய் 50லிருந்து ரூபாய் 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ ஒளிப்பதிவு (Video camera) கட்டணம் ரூபாய் 500லிருந்து ரூபாய் 750 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த கட்டண உயர்வு குறித்துப் பேசிய பூங்கா உதவி இயக்குநர் மணிகண்ட பிரபு, “உணவு, ஊதியம், பராமரிப்பு, ஆகியவற்றிற்காக கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லை, சக்கர நாற்காலிக்கு முன்பு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது, தற்போது இலவசமாக வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை, பாலூட்டும் அறை ஆகியவைகளுக்கு கட்டணமில்லை” என தெரிவித்தார்.

இது குறித்து வருந்திய பார்வையாளர்கள், “வெளியூரில் இருந்து வருகிறோம். திடீரென கட்டணம் 200 ரூபாய் என உயர்த்தியது அதிர்ச்சியாக இருந்தது. வாகனம் நிறுத்த கட்டணம், நுழைவு கட்டணம், தண்ணீர் பாட்டிலுக்கு வைப்புத் தொகை 10 ரூபாய், பேட்டரி காருக்கு கட்டணம் என 500 ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்படுகிறது. நாங்கள் எப்படி வருவது” என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Related Posts

error: Content is protected !!