4-வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசிய மாணவர்களுக்கு ஜாமீன்!
சென்னையில் 4-வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
4–வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசும் வீடியோ காட்சி ‘பேஸ்புக்’கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ காட்சியில், வெள்ளை சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் 4–வது மாடியில் நின்று கொண்டு ஒரு நாயை அதன் முதுகு மற்றும் தலையை பிடித்தபடி தூக்கி வீச தயாராக இருக்கிறார். அப்போது அந்த கட்டிடத்தின் உயரம் வீடியோவில் காட்டப்படுகிறது. சிறிது நேரத்தில் நாயை அந்த நபர் மாடியில் இருந்து தூக்கி கீழே வீசி எறிகிறார். தரையில் விழுந்த நாய் வலி தாங்க முடியாமல் கதறி துடிக்கிறது.வாயில்லா ஜீவனை வதைக்கும் இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ காட்சியை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து விசாரணையில் மாடியில் இருந்து நாயை தூக்கி வீசியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கவுதம்சுதர்சன் (வயது 22) என்றும், அந்தக்காட்சியை செல்போனில் படம் பிடித்தவர் அவரது நண்பர் ஆசிஸ்பால் என்பதும் தெரியவந்தது. இதற்கிடையே மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்ட போலீசார், அவர்களை போலீசில் சரண் அடைய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுள்ளனர். இதனையடுத்து மாணவர்களின் பெற்றோரே அவர்களை போலீஸில் ஒப்படைத்தனர். இதையடுத்து மாணவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்பதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டனர். இதற்கிடையே அவர்கள் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் உத்தரவாதத்துடன் ஜாமீன் வழங்கி உள்ளது.
அதே சமயம் நேற்று இரவு இரண்டாம் கட்டளை பகுதியில் வீசப்பட்ட நாய் உயிருடன் மீட்கப்பட்டது. அப்போது அதன் காலில் காயங்கள் இருந்தன. பாதிக்கப்பட்ட நாய் இன்று சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மருத்துவமனையில் நாய்க்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து சிகிச்சை அளித்த டாக்டர் பேசுகையில், மருத்துவ பரிசோதனையில் நாயின் வலது தொடையில் உள்ள எழுப்பில் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மற்றபடி எல்லாம் நன்றாக உள்ளது. நாய் மோசமான நிலையை கடந்துவிட்டது. நாயால் இனி நடக்க முடியும். நாய் பெரும் அதிர்ச்சியில் உள்ளது,” என்று கூறிஉள்ளார். இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனையை அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது.இதற்கிடையே உயிரின் மதிப்பு தெரியாதவர் எதிர்கால டாக்டரா என்று அதிர்ச்சியுடன் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள்ளால் காய்ச்சி எடுக்கிறார்கள்..
இதனிடையே நாயை மாடியில் இருந்து வீசிய மாணவர்கள் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.