டெல்லியில் பிரிட்டிஷ் அடையாளம் மறைந்த சம்பவம் தெரியுமா?
சில விஷயங்கள் ஒன்றுகொன்று தொடர்பில்லாதது போல் நடந்தாலும், கொஞ்சம் ஆழமாக நோக்கினால் ஒரு புன்னகை வெளிபடும். பிரிட்டிஷ் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் முந்தா நாள் தன் 96 வயதில் காலமானார், அவருக்கு பின் 74 வயதான சார்லஸ் அரசராக முடிசூட்டபட இருக்கின்றார். சார்லஸுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கும் ஒரே ராசி, 70 வயதை தொடும் பொழுதுதான் முடிசூடமுடிகின்றது அரச குடும்பத்தில் சில நேரங்களில் அப்படித்தான். ஆனால் முக முத்து,முக அழகிரி என ஸ்டாலினிக்கு மூத்தவர்கள் போல் சார்லஸுக்கு இல்லை அதனால் அவர் மூத்தவர் என்பதால் அரசராகி விட்டார்.
பிரிட்டன் அரசகுடும்பம் 1600களில் மெல்ல எழும்பிற்று 1800களில் உலகில் சூரியன் அஸ்தமிக்கா சாம்ராஜ்யத்தை நிறுவி உலகை ஆட்டிவைத்தது, உலகெல்லாம் சுரண்டி அந்த செல்வத்தில் பிரிட்டனை கொழிக்க வைத்தார்கள், தங்கமும் கோஹினூர் போன்ற வைரமுமாக கொண்டு சென்றார்கள். அப்பொழுது அவர்களுக்கு உலகில் பெரும் எதிரிகள் யாருமே இல்லை, ஆட்டோமன் சாம்ராஜ்யத்திடம் கடல்படை இல்லை அல்லது அவர்களும் இவர்களும் மோத வாய்ப்பில்லை என்பதால் சிக்கல் இல்லை. அப்பொழுது அவர்கள் சந்தித்த முதல் சவால் அமெரிக்க சுதந்திரம், அந்த மக்களாட்சிமுறை உலகின் கவனத்தை ஈர்த்தது எனினும் மிகப்பெரிய சவாலாக நெப்போலியன் எழும்பினான். இதையும் தாண்டி வலுத்தார்கள், உலகையே ஆட்டிவைத்தார்கள்
எனினும் அமெரிக்கா கொடுத்த மக்களாட்சியின் எழுச்சியும் கம்யூனிச போராட்டங்களும் மெல்ல மெல்ல அரசகுடும்பத்தின் ஆட்சியை வலுவிழக்க வைத்தன. விக்டோரியா மகாராணிக்குபின் மெல்ல மெல்ல அது வலுவிழந்தாலும் 1950 வரை உலகில் அக்குடும்பம் ஆதிக்கம் செலுத்தியது, அந்த குடும்பத்தில் சுமார் 70 ஆண்டுகள் அரசியாக இருந்தவர்தான் இந்த எலிசபெத் . இவர் இரண்டாம் எலிசபெத் , காரணம் 1600களில் அங்கு ஒரு எலிசபெத் ராணி இருந்தார் .அவர் முதல் எலிசபெத் தன் நீண்ட வாழ்வில் 70 வருடமாக உலகம் சந்தித்த அத்தனை மாறுதல்களையும் கண்டு, உலக பெரும் தலைவர்களுடன் உறவாடி, பெரும் வரலாற்று திருப்பம் தொழில்நுட்ப மாற்றம் அரசியல்மாற்றம் என பலவற்றை கண்டவர் அந்த ராணி, ஒருவகையில் அது முழுவாழ்வு இப்போது அவர் மறைந்துவிட்டார்.
யாரும் அவர் புகழை எப்படியும் பாடட்டும் ஆனால் ஒரு இடத்தில் கூட ஏன் இந்தியா வந்தபொழுது கூட இந்திய சுதந்திரபோராட்ட காலத்தில் பிரிட்டிஷ் கிறிஸ்தவர் செய்த கொடுமைகள் பற்றி, ஜாலியன் வாலாபாக் கொடுமைகள் பற்றி அவர் வாயே திறக்கவில்லை. அப்படியே இந்தியாவில் இருந்து கொண்டு செல்லபட்ட கோஹினூர் வைரம், வீரசிவாஜியின் வாள் பற்றியெல்லாம் பேசவே இல்லை . அந்த அரசகுடும்ப கவுரவம் அவரை பேசவிடவில்லை, கடைசிவரை அந்த வைராக்கியத்திலே சென்றும் விட்டார். எப்பொழுதோ ஏதோ செய்த தவத்தின் பலன் இப்பிறவியில் அவரை ராணியாக்கி வாழவைத்தது, அந்த ஆத்மா தன் நாடகத்தை முடித்து கொண்டு கிளம்பி விட்டது,
இச்சூழலில் மோடி, அமெரிக்க அதிபர் பிடன் என எல்லோரும் ராணிக்கு இரங்கல் தெரிவிக்கும் நேரம் இது. சரி பிரிட்டானிய நிலையினை உலகம் இப்படி அந்த அரசகுடும்பத்துக்கு அஞ்சலி செலுத்தி கொண்டிருக்க, டெல்லியில் இந்தியா அந்த அரசகுடும்பத்து அடையாளத்தை அறவே அகற்றியிருக்கின்றது . ஆம், இந்தியாவின் தலைநகராக கல்கத்தாவினைத்தான் வெள்ளையன் வைத்திருந்தான், 1911 வரை இந்தியாவின் தலைநகராக கல்கத்தாவே விளங்கிற்று. பின் பல காரணங்களுக்காக டெல்லியினை தலைநகராக்கினான், அப்பொழுது புதுடெல்லி வடிவமைக்கபட்டது. சர் எட்வின் லுயிஸ்டன் அதனை வடிவமைத்தான் , 1911ல் டெல்லி இந்தியாவின் தலைநகரானபொழுது பிரிட்டனின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னன் இந்தியா வந்தான். அவனுக்கு பம்பாயில் வரவேற்பு கொடுக்க பெரும் அலங்கார வளைவும் டெல்லியிலும் அப்படி ஒரு வளைவும் கட்டப்பட்டது. டெல்லியில் அவன் நடந்த பாதை “ராஜபாதை” என அறிவிக்கபட்டது, அவன் அவ்வழி பவனி வந்துதான் இந்தியாவின் தலைநகரம் டெல்லிஎன அறிவித்தான்
இந்த ராஜபாதை முந்தா நேற்று வரை அதே பெயரில் அதாவது பிரிட்டன் அரசன் நடந்த பாதை என்றே அழைக்கப்பட்டது. ஆனால் மோடி அரசு தலைநகருக்கு புதுவடிவம் கொடுக்கின்றது, சுதந்திர இந்தியாவில் 1947ல் எதெல்லாம் நடந்திருக்க வேண்டுமோ அதனை இப்பொழுதுதான் டெல்லி சந்திக்கின்றது . ஒரு நாட்டின் தலைநகரம் அந்நாட்டை பிரதிநிதித்துவபடுத்துவது, அது தன் அடையாளங்களையும் பாரம்பரியத்தையும் கடந்துவந்த போராட்டத்தையும் சொல்ல வேண்டும். ஆனால் டெல்லி அப்படியல்ல அது ஆங்கில மற்றும் மொகலாய சாயல்கள் அடையாளம் அனைத்தும் தாங்கி நிற்கின்றது அதனை கொஞ்சம்கொஞ்சமாக மாற்றுகின்றார் மோடி.
இந்தியாவுக்கு புதிய நாடாளுமன்றம் அதி உயர் காவலுடன் கட்டபட்டிருக்கின்றது விரைவில் திறக்கபட இருக்கும் அந்த மன்றம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது, அதற்கு முன் சில காரியங்களை செய்திருகின்றது மோடி அரசு. டெல்லியில் காங்கிரசால் மறைக்கபட்ட நேதாஜிக்கு பிரமாண்ட சிலை, அதாவது பிரிட்டிசாரால் குற்றவாளி என அறிவிக்கபட்டு காங்கிரசால் நாட்டுக்குள் வரகூடாது என தடுக்கபட்ட நேதாஜிக்கு சிலைவைத்துள்ளது மோடி அரசு. “டெல்லி சலோ” என தன் வீரமிக்க முழக்கத்துடன் படைதிரட்டி வந்த நேதாஜிக்கு டெல்லியில் ஒரு அடையாளமும் இல்லாமல் வைத்திருந்தது காங்கிரஸ். மோடி நேதாஜிக்கு சிலை திறந்து, அந்த ராஜவீதியினையும் “கர்தவ்யா பாத்” என மாற்றியிருக்கின்றார். ஆம், அவர் அந்த சாலையினை தமிழக கருணாந்தி மவுண்ட்ரோட்டை அண்ணாசாலை என மாற்றியது போல் ஹெட்கேவர் சாலை, கோவல்கர் சாலை, அத்வானி சாலை என மாற்றவில்லை .
மாறாக “கடமை சாலை” என பொருள்படும் “கர்தவ்யா பாதை” என மாற்றியிருக்கின்றார். ஆம்,அது ராஜா செல்லும் வீதி அல்ல நாட்டுக்கு கடமையாற்றுபவன் செல்லும் பாதை என்பதை அழகாக உலகுக்க்கே சொல்லியிருக்கின்றார் மோடி . முதிர்ந்த பிரிட்டன் ராணி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் உலகம் அதே நாளில் இந்திய தலைநகர் டெல்லியில் பிரிட்டிஷ் அடையாளம் மறைவதை பார்த்து மெல்ல புன்னகைக்கின்றது. அதுவும் தங்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்தியா, மிக கடுமையாக அடக்கி ஏளனப் படுத்தபட்ட இந்தியா சரியான தலைவன் வழியில் தங்களை பின் தள்ளி பொருளாதாரத்தில் ஐந்தாம் இடத்தை பிடித்ததை பற்றி அவரின் மனம் என்ன சிந்தித்திருக்கும் என்பது அவருக்குதான் தெரியும்.
அந்த வரலாற்று சாதனையினை அல்லது இந்தியா உடைத்து போட்டாலும் மீண்டெழுவதை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார் என்பதை யூகிப்பது ஒன்றும் கடினம் அல்ல. தான் ஒரு இந்து என சொல்லும் இந்திய வம்சாவழி பிரிட்டனின் பிரதமர் பதவி வரை நெருங்கிவிட்டதை அவர் எப்படி எடுத்திருப்பார் என்பதும் ஊகிக்க சிரமானது அல்ல. முதிர்ந்த பக்குவமான தனிமையில் அவர் முகத்திலும் ஒரு புன்னகை நிச்சயம் வந்திருக்கும்..!
– ப்ரம்மரிஷி