பிரதமர் & சீன அதிபர் சந்திப்பு நடக்கும் மாமல்லபுரத்தில் முதல்வர் ஆய்வு!

பிரதமர் & சீன அதிபர் சந்திப்பு நடக்கும் மாமல்லபுரத்தில் முதல்வர் ஆய்வு!

பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு நடைபெறவுள்ள மாமல்லபுரத்தில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பிரதமர் நரேந்திரமோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வருகிற 11-ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், வெண்ணெய் பாறை, ஐந்துரதம் உள்ளிட்ட மாமல்லபுரத்தில் உள்ள புராதன சிறப்பு மிகுந்த இடங்களையும் பார்வையிட உள்ளனர். இதை யடுத்து மாமல்லபுரம் நகரம், முழுக்க முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல் தமிழ்நாடில், முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி, காவல் துறை சட்டம் ஒழுங்கு இயக்குநர் ஜே.கே.திரிபாதி, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன், சீன தூதரக அதிகாரிகள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், கண்காணிப்பு பணிகள் குறித்தும் முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றம், உட்கட்டமைப்பு சீரமைப்பு பணிகள் எந்த அளவில் நடைபெற்று வருகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் கடற்கரையோர பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்திய முதலமைச்சர், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உத்தரவிட்டார்.

சீன அதிபரும், பிரதமர் மோடியும் பார்வையிடவுள்ள புராதன சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். தலைவர்கள் இருவரும் நடந்து செல்வதற்கான நடைபாதை அமைக்கும் பணிகள், புல்தரை அமைக்கும் பணிகள், சிற்பங்களை இரவிலும் கண்டுகளிக்கும் வண்ணம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்விளக்குகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

முதலாவதாக அர்ச்சுனன் தபசு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், அடுத்ததாக வெண்ணெய் பாறை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஐந்துரதம் பகுதியிலும், அதற்கடுத்தபடியாக கடற்கரை கோவில் பகுதியிலும் ஆய்வு செய்தார். முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் உடன் சென்றனர்.

சுமார் இரண்டு மணி நேரம் மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் பின்னர் அங்கிருந்து சென்னை திரும்பினார்.

error: Content is protected !!