அரேஞ்ஜ்ட் மேரேஜ்! – தலைமுறைகளுக்குக் கச்சிதமாகக் கடத்தப்படும் பயிற்சி.
“அரேஞ்ஜ்டு மேரேஜ்” விழாவில் பங்கேற்பது பற்றி மறுபடியும் அசைப் போட்டு பார்க்கிறேன். சிறுவயதில் அந்தச் சடங்குளைப் பார்க்கிறபோதெல்லாம் எவ்வளவு ஆழ்ந்த அர்த்தத்துடன் செய்யப்படுகின்றன என்ற பிரமிப்புடன் கவனித்திருக்கிறேன். காலங்காலமாக ஊட்டப்பட்டு வந்திருக்கிற அந்த அர்த்தங்கள் மீதான மயக்கங்கள் பின்னர்தான் தெளிவடையத் தொடங்கின.அப்போதும் சரி, அண்மையில் கலந்துகொள்ள நேரிட்ட சில “அரேஞ்ஜ்டு மேரேஜ்“ நிகழ்ச்சிகளிிலும் சரி சடங்குகளின் நோக்கம் அடிப்படையில் இரண்டுதான்.
ஒன்று “நம்ம வழக்கப்படி”, ”நம்ம மரபுப்படி”, ”நம்ம சம்பிரதாயப்படி” என்று தாலி முதல் தாம்பாளம் வரையில் அத்தனையிலும் பொதிந்திருப்பது அந்தந்த சாதியை, சாதி உணர்வை அடுத்த தலைமுறையினரிடம் ஆழமாகப் பதியவைக்கிற போதனைதான். நிச்சயதார்த்தமாகட்டும் திருமணச் சடங்காகட்டும் அவற்றில் பங்கேற்கிறவர்கள் ஒவ்வொருவரும் தங்களது திருமணத்தின்போது நடந்தவற்றை ஞாபகப்படுத்திக்கொண்டு இப்போது அவை விட்டுப்போகாமல் தொடர்வதை உறுதிப்படுத்துகிறார்கள். இப்போது புதுமணமக்களாக இருப்போர், பின்னர் மூத்தவர்களாக மாறுகிறபோது தாங்கள் பங்கேற்றும் திருமணச் சடங்குகளில் இதையெல்லாம் நினைவுபடுத்துவார்கள்.
சாதியோடு அடையாளப்படுத்திக் கட்டப்படும் சங்கிலி மேலும் வலுப்படுத்தப்படும். நண்பர்கள் எல்லாச் சமூகங்களிலும் இருக்கிறார்கள் என்பதால் எல்லாச் சமூகங்களின் மணச்சடங்குகளிலும் இதையே பார்த்திருக்கிறேன்.சடங்குகளின் இரண்டாவது நோக்கம் – ஆணுக்கு அடங்கியவளாகவே பெண் இருக்க வேண்டும் என்ற போதனை. சடங்குகளில் தலைமைப்புரோகிதர் முதல் குடும்பப்பெரியவர்கள், சமூகப் பெரிய மனிதர்கள், சம்பந்திகளாக அமர்வோர் என அத்தனை பேரும் ஆண்களாகவே இருக்கிறார்கள். பெண்கள் பக்கவாட்டில் மரியாதையோடும் பக்தியோடும் நிற்கிறார்கள். சடங்குப் பொருள்களை ஊர்வலமாகக் கொண்டுவந்து சேர்த்தபின் இப்படி ஒதுங்கிநிற்பதே பெண்களின் பொறுப்பு.
சடங்குகளுக்குத் தேவைப்படும் பொருள்களை உள்ளேயிருந்து எடுத்துக்கொண்டு தருகிற வேலையும் பெண்களுக்குத் தரப்படுகிறது. செல்வாக்கு உள்ள (அதாவது சொத்துகள் தன் பெயரில் உள்ள) பெண்ணாக இருக்கும் நிலையில், விட்டுப்போன சடங்கு எதையாவது நினைவூட்டலாம் அவ்வளவுதான்.
மற்றொரு காட்சியைத் தவறாமல் காண்கிறேன். ஆசிர்வாதங்கள், பரிசு வழங்க்ல் எல்லாம் முடிந்து மணமக்களும் சாப்பாட்டுப் பந்தியில் அமர்கிறபோது நிச்சயமாக இது நடக்கும். இருவருமே மாலை, கையில் தரப்பட்ட பூச்செண்டு, மேல்துண்டு உள்ளிட்டவற்றோடுதான் பந்திக்கு வருகிறார்கள்.மணமகன் சாப்பிட்டு முடித்தவுடன் அந்தப் பொருள்களை அப்படியே வைத்துவிட்டுக் கை கழுவுகிற இடத்திற்குப் போவான். மணமகள் அந்தப் பொருள்களை எல்லாம் எடுத்து்க்கொண்டு அவன் பின்னால் போய் நிற்பாள், அவன் கைகழுவி முடித்தவுடன் முதலில் வாயைத் துடைத்துக்கொள்ளத் துண்டு, பின்னர் மற்ற பொருள்கள் என அவன் கையில் ஒப்படைப்பாள்.
ஒருவேளை அவன் தன் உறவினர்களோடு அல்லது நண்பர்களோடு பேசிக்கொண்டிருப்பானானால், அவனருகில் காத்திருநது அந்தப் பொருள்களை ஒப்படைகக வேண்டும். அப்படித்தான் அவள் செய்ய வேண்டும் என்று சொல்லித்தருவதற்கு (பெண்ணின் வளர்ப்பு சரியில்லை என்ற பேச்சு வந்துவிடக்கூடாது என்ற பதற்றத்துடன்) மற்ற பெண்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.தலைமுறைகளுக்குக் கச்சிதமாகக் கடத்தப்படுகிறது இந்தப் பயிற்சி.
குமரேசன் அசாக்