ஏர்போர்ட் ‘மது’ பிசினஸ் சீக்ரெட் : கல்லாக் கட்டும் ‘டியூட்டி ப்ரீ’ மேஜிக்
விமான நிலையங்கள் என்றாலே ஒரு காலத்தில் விமானங்கள் வந்து செல்லும் தளம், பயணிகள் ஏறும் இடம் என்ற பிம்பம் மட்டுமே இருந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வானில் பறக்கும் விமானங்களை விட, தரைமட்டத்தில் விற்கப்படும் மதுபானங்களும், மற்ற சில்லறை வர்த்தகமுமே இந்திய விமான நிலையங்களின் லாபத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக உருவெடுத்துள்ளன. ‘லேன்டிங் கட்டணம்’, ‘பயணிகள் சேவை கட்டணம்’ போன்ற பாரம்பரிய வருமானங்களைத் தாண்டி, இன்று விமான நிலையங்கள் ஒரு பிரம்மாண்ட வணிக வளாகங்களாக (Shopping Hubs) மாறிவருவதை சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.
மது விற்பனைதான் டாப்!
ஜிஎம்ஆர் (GMR) போன்ற பெரிய விமான நிலைய நிறுவனங்களின் தரவுகளைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. பயணிகளுக்கான சில்லறை விற்பனை மற்றும் ‘டியூட்டி ப்ரீ’ (Duty-free) கடைகளில் நடக்கும் விற்பனையில் 58 சதவீதத்திற்கும் மேல் மதுபானங்கள் மற்றும் ஒயின் ரகங்களே ஆக்கிரமித்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் 16 சதவீத இடத்தைப் பிடிக்கின்றன.

சீனா போன்ற நாடுகளில் அழகு சாதனப் பொருட்களே 61 சதவீதம் விற்பனையாகின்றன. ஆனால், இந்தியாவில் நிலைமை அப்படியே உல்டா! மதுபான விற்பனைதான் இங்கு விமான நிலையங்களின் கல்லாவைக் கட்டுகிறது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மதுபானங்களுக்கான வரி மிக அதிகமாக இருப்பதால், விமான நிலையங்களில் கிடைக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்ட மதுபானங்களை வாங்குவதற்கே பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
லாபத்தில் 70% பங்கு!
விமான நிலையங்களின் மொத்த வருவாயில் 50 முதல் 60 சதவீதம் வரை ‘விமானம் சாராத’ (Non-aeronautical) சேவைகள் மூலமே கிடைக்கிறது. இதில் டியூட்டி ப்ரீ கடைகள், உணவு விடுதிகள், லவுஞ்ச் வசதிகள், வாகன நிறுத்தம் மற்றும் விளம்பரங்கள் அடங்கும். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒரு விமான நிலையத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு லாபத்தில் (Operating Profit) இந்தச் சேவைகளின் பங்கு மட்டும் 70 சதவீதத்திற்கும் மேல் என்பதுதான்!
அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் (Adani Airport Holdings) நிறுவனம், நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 4,743 கோடி ரூபாயை இந்தச் சேவைகள் மூலம் வருமானமாக ஈட்டியுள்ளது. இதில் டியூட்டி ப்ரீ கடைகளின் பங்களிப்பு மட்டும் 1,585 கோடி ரூபாய். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது.
இன்னும் வளர இடமிருக்கிறது!
துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற உலகத்தரம் வாய்ந்த விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் டியூட்டி ப்ரீ கடைகளில் பொருட்கள் வாங்குவோரின் எண்ணிக்கை (Penetration) இன்னும் குறைவாகவே (10%) உள்ளது. துபாயில் இது 15 சதவீதமாகவும், சிங்கப்பூரில் 18 சதவீதமாகவும் இருக்கிறது. ஆனால், இந்திய விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை (Footfall) 40 சதவீதம் வரை இருப்பதால், வரும் காலங்களில் இந்தத் துறை இன்னும் பிரம்மாண்டமாக வளரும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
விமானம் ஏறுவதற்கு முன்பாக பயணிகளுக்கு வேறு மாற்றுகள் இல்லாததும், ‘கேப்டிவ் டிமாண்ட்’ (Captive Demand) எனப்படும் கட்டாயத் தேவையும் இந்த வணிக வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகிறது. மொத்தத்தில், இந்திய விமான நிலையங்கள் இனி வெறும் பயணத் தளங்கள் மட்டுமல்ல, அவை லாபம் கொழிக்கும் மது மற்றும் வர்த்தக மையங்களாகவே பார்க்கப்படுகின்றன.
நிலவளம் ரெங்கராஜன்


