பசுக்களுக்கு(ம்) ஆதார் டைப்பில் அடையாள எண்! – மத்திய அரசு முடிவு
நம்ம இந்தியாவில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரே அடையாளச் சின்னமாக ஆதார் எண்ணை கொண்டு வந்து அதுவும் அனைத்துக்கும் அந்த ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வரும் வேளையில் இப்போது பசுக்களுக்கும் அடையாள குறியீடாக யுஐடி என்ற அடையாள எண் வழங்கப்போவதாக சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு வந்தது முதல் நாட்டில் பசுக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் பசு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டு சட்டவிரோத இறைச்சிக்கூடங்கள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பசுக்களுக்கும் அடையாள எண் வழங்கப்படும் திட்டம் இருப்பதாக சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதாவது இந்திய வங்க தேச எல்லையில் கால்நடைகள் கடத்தப்படுவதை தடுக்கவேண்டும் என்று கோரி சுப்ரீமகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கால்நடைகள் கடத்தலை தடுக்க என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஒரு அறிக்கையை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில் இந்தியாவில் பசுக்களை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு பசுவுக்கும் 12 இலக்க ஒரு அடையாள எண் (யுஐடி) வழங்கப்படும். இதற்கான அடையாள அட்டையில் பசுக்களின் வயது, இனம், பாலினம், உயரம், உடல், நிறம், கொம்பின் வகை, வால் மற்றும் பசுவின் சிறப்பு அடையாளம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கைவிடப்பட்ட பசுக்களுக்காக குறைந்தபட்சம் 500 தங்கும் விடுதி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில அரசுகள் இந்த வசதிகளுக்கான நிதியுதவியைச் செய்ய வேண்டும். பால் கறக்கும் வயதிற்கு அப்பாற்பட்ட பசுவிற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்கலாம் என்று கூறி உள்ளது.
தற்போதைய நிலையில் இந்தியாவில் சுமார் 4.7 கோடி பசுக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டு மற்றும் கலப்பின பசுக்களும் அடங்கும். இந்த பசுக்கள் ஒவ்வொன்றிற்கும்வழங்கப்படும். இந்த எண் அவற்றின் இயக்கத்தையும், உற்பத்தித்திறனையும் கண்காணிக்க அரசாங்கத்திற்கு உதவும் என்று நம்பப் படுகிறது.