செத்தாலும் வேணும் ஆதார் அட்டை! – மத்திய அரசு அடாவடி ஆர்டர்!

மனிதர்கள் உயிர்வாழ காற்று, நீர், சூரிய ஓளி ஆகியவை இல்லாவிட்டாலும் நம் இந்தியாவில் குடிமகனாக இருக்க ஆதார் அட்டை அத்தியாவசியம் என்றாகி வருகிறது. சமையல் எரிவாயு, உரம் உள்ளிட்ட அரசின் மானியத்தொகை யை, பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு பெறுவதிலிருந்து அவசர தேவைக்காக பயன்படுத்தும் ஆம்புலன்ஸ் வரை ஆதார் எண் எல்லா இடங்களிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என சுப்ரீம் கோர்ட் ஆர்டர் மேல் ஆர்டர் போட்டாலும், அதை கண்டு கொள்ளாத மத்திய அரசு அடுத்து எதில் ஆதாரை புகுத்தலாம் என மேலும், மேலும் யோசித்து வருகிறது.
இந்நிலையில்,அக்டோபர் 1-ம் தேதி முதல் இறப்புச் சான்றிதழ் பெற ஆதார் எண் அவசியம் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ஜம்மு காஷ்மீர், மேகாலயா, அசாம் ஆகிய மாநிலங்கள் நீங்கலாக அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது ஒருவர் இறந்து விடுகிறார், அவரது இறப்புச் சான்றிதழைப் பெற விரும்பும் நபர் இறந்தவரின் ஆதார் எண்ணை அளிப்பது அவசியம், இறந்தவர் பெயரில் ஆதார் எண் இல்லை என்றாலோ அல்லது ஆதார் விண்ணபித்த எண் இல்லை என்றாலோ இறந்தவரிடம் ஆதார் அட்டை இல்லை என்பதற்கான சான்றிதழை இறந்தவர் சார்பாக இறப்புச் சான்றிதழ் கோரும் நபர் சமர்ப்பிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதில் விண்ணப்பதாரர் ஏதாவது தவறான தகவல் அளித்தால் ஆதார் சட்டம், 2016-ன் படியும், பிறப்பு, இறப்பு பதிவுச்சட்டம், 1969-ன் படியும் குற்றமாகக் கருதப்படும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து உள்துறை விவகார அமைச்சகத்தின் மத்தியத் தலைமை பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் ”இறப்புச் சான்றிதழுக்காக விண்ணப்பிப்போரின் ஆதார் பயன்பாடு என்பது இறந்தவரின் உறவினர்கள்/ சார்ந்தோர்/ தொடர்புடையவர்கள் ஆகியோர் அளிக்கும் தரவுகளின் துல்லியத்தன்மையைப் பொறுத்தது, இதன் மூலம் அடையாள மோசடி சிறந்த முறையில் தடுக்கப்படும். மேலும் இறந்தவரின் அடையாளத்தையும் பதிவு செய்ய வசதியாக அமையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.