மாநகராட்சி விளம்பர தூதராகிறார் ரஜினி? -பெங்களூர மேயர் தகவல்
பெங்களூர் நகர மக்களிடம் சுத்தம் பற்றியும், கழிவுகளை ரகம் பிரித்து அப்புறப்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடிகர் ரஜினிகாந்தை தூதராக பொறுப்பு ஏற்க கேட்கப்போவதாக மாநகர மேயர் அறிவித்துள்ளார். மேலும் இதில் இணைந்து பணியாற்ற கன்னட நடிகர் உபேந்திராவையும் அழைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் நகர மக்களிடம் கழிவு குப்பைகளை ரகம் பிரித்து அப்புறப்படுத்தி சுத்தத்தை பேணுவதற்கான பணியில் பெங்களூர் நகர மேயர் சத்யநாராயணா தீவிரம் காட்டி வருகிறார். இவர் ரஜினியின் பள்ளி தோழராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெங்களூரை குப்பையில்லா நகரமாக மாற்றுவதே தனது குறிக்கோள். நடிகர் ரஜினிகாந்த் எனது நண்பர். அவரை பெங்களூர் மாநகராட்சி விளம்பர தூதராக நியமிக்க நான் திட்டமிட்டுள்ளேன்.இது தொடர்பாக அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவேன். மேலும் கவுன்சிலர்களுடன் சென்னைக்கு சென்று அவரை சந்திக்க முடிவு செய்துள்ளேன்.
எனது இந்த திட்டத்தை அவர் ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் எப்போதும் எனது முடிவை நிராகரிக்க மாட்டார். அவர் மூலம் பெங்களூரில் குப்பை பிரச்னை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.மேலும், இந்த திட்டத்தில் கன்னட நடிகர் உபேந்திராவுக்கும் அழைப்பு விடுக்கப்படும். குப்பை கழிவுகளை அகற்றுவது தொடர்பாக மாணவர்களிடம் மட்டுமே விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் வியாபாரிகளிடமும் இதுபற்றி எடுத்துக் கூறப்படும்” என்றார்.
கோடங்கி