அம்பேத்கர் பெயரை சூட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர், எம்.எல்.ஏ வீடுகளுக்கு தீ!

அம்பேத்கர் பெயரை சூட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர், எம்.எல்.ஏ வீடுகளுக்கு தீ!

ந்திராவில் புதிதாக உருவாக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்திற்கு, அரசியல் சட்ட மேதை, டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பெயரை சூட்டும் அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசை எதிர்த்து அமலாபுரம் நகரில் நடந்த போராட்டத்தில் தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆளும் கட்சியை சேர்ந்த மும்மிடிவரத்தின் ஒய்எஸ்ஆர் சிபி எம்எல்ஏ பி.சதீஷின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும், போக்குவரத்து அமைச்சர் பி. விஸ்வரூப்பின் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பர்னிச்சர்களுக்கு தீ வைக்கப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கோனசீமா எஸ்பி கே. சுப்பா ரெட்டி கூறும்போது, போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கும், பேருந்துகளுக்கும் தீ வைத்தனர். வன்முறையில் காவலர்கள் பலர் காயமடைந்ததாக தெரிவித்தார்.

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு ஏப்ரல் மாதம் அறிவித்த 13 புதிய மாவட்டங்களில் கோனசீமாவும் அடங்கும். போராட்டத்திற்கு தலைமை தாங்கும் கோனசீமா பரிக்ரக்ஷன சமிதி, கோனசீமா சாதனா சமிதி ஆகிய அமைப்புகள், சுற்றுலாப் பகுதியின் ‘பாரம்பரிய பெயரை’ மீண்டும் மாவட்டத்திற்கு வைத்திட கோரிக்கை விடுக்கின்றனர்.

இதற்கிடையில், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிதான் போராட்டங்களுக்கு காரணம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வரூப் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் கூறியதாவது, கோனாசீமா அம்பேத்கர் மாவட்டமாக மறுபெயரிடப்பட்டது. அங்கு அதிக மக்கள்தொகை எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் கோரிக்கைகளை ஏற்றுகொள்ளப்பட்டது. ஆனால், குழப்பம் விளைவிப்பதற்காக தெலுங்குதேசம் போராட்டங்களை தூண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!