மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் !- ஐ.நா.அதிரடி!

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியா நீக்கப்பட்டது.இதுபோன்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இருந்து ஒரு நாடு இடைநீக்கம் செய்யப்படுவது இது முதன்முறை அல்ல. கடந்த 2011 ஆம் ஆண்டு லிபியா இவ்வாறாக வாக்கெடுப்பு மூலம் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது. ஆனால், ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடு ஒன்று இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதன்முறையாக்கும்.
ரஷியா – உக்ரைன் இடையேயான போர் 40 நாள்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷியா போர் அறிவிப்பு செய்ததிலிருந்து பல்வேறு உலக நாடுகளும் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது.ஒன்றரை மாதங்களாக தாக்குதல் நடந்து வரும் நிலையில், ரஷ்யாவை போரை நிறுத்தும்படி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கான அழுத்தம் கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ளன. எண்ணெய், நிலக்கரி இறக்குமதி செய்யமாட்டோம் என்று ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்தியுள்ளது அமெரிக்கா. இருந்தாலும் கூட ரஷ்யா போரை நிறுத்தவில்லை.இந்நிலையில் தான் உக்ரைனின் புக்கா நகரப் படுகொலை சர்வதேச கவனத்தை ஈர்த்தது. கைகள் கட்டப்பட்டு, நெற்றியிலும், நெஞ்சிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த சடலங்கள் புக்கா நகரில் இருந்து மீட்கப்பட்டன. இதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும் ரஷியாவை ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் ரஷியாவிற்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது.
அந்த வாக்கெடுப்பில் 193 உறுப்பு நாடுகளில் 93 நாடுகள் ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து தற்காலிகமாக நீக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்தன. 24 நாடுகள் எதிராக வாக்களித்தன. . இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை. ஆனாலும் பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் ரஷியா ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து ரஷியா நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.