தமிழக அரசின் நிதி நிலை வெள்ளை அறிக்கை – முழு விபரம்!.

தமிழக அரசின் நிதி நிலை வெள்ளை அறிக்கை – முழு விபரம்!.

மிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டார். அப்போது ”தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 பொதுக்கடன் உள்ளது; கடந்த ஆட்சியில் அதிகளவு கடனை சார்ந்து இருந்ததாலேயே தற்போது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் சுமை ரூபாய் 5.75 லட்சம் கோடி ஆக உள்ளது . தமிழ்நாடு அரசு வாங்கிய கடன்களுக்காக ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடி வட்டி செலுத்தி வருகிறது”என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் நிதியமைச்சர் தெரிவித்த தகவல்கள் இதோ;

வெள்ளை அறிக்கை வெளியிட பலர் உதவி செய்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது.

2016-ல் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ.2.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

2021-ல் அதிமுக அரசன் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ .4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது.

தமிழ்நாட்டின் கடன், வருமான விவரங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் நிலை, செலவினங்களின் நிலையம் அறிக்கையில் உள்ளது. அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் குறைந்துள்ளது என்பது முக்கிய பிரச்சனை. 2006 – 2011 வரை திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் வருவாய் உபரியாக இருந்தது. கடைசி 5 ஆண்டுகளில் அதிமுக அரசின் வருவாய் பற்றாக்குறை 1 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. அரசின் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை அதிமுக ஆட்சியில் இருந்தது.

வருவாய் பற்றாக்குறையே ரூ.1.50 லட்சம் கோடியாக இருந்ததால், நிதிப் பற்றாக்குறை அதைவிட பலமடங்கு உயர்ந்து விட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசின் வருவாய் 4-ல் ஒரு மடங்கு குறைந்துவிட்டது.

2020 – 2021 -ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி ஆகும்.

ஏற்கனவே தமிழ்நாடு பொருளாதாரம் பலவீனமாக இருந்த நிலையில் கொரோனா செலவும் சேர்ந்ததால் நிதி நிலை மோசமானது. கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூ. 3 லட்சம் கோடி. தமிழ்நாட்டில் தலா ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ.2,63,976 பொது சந்தாக்கடன் உள்ளது. தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்த கணக்கு சரிவர பராமரிக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.5.24 லட்சம் கோடியாக உள்ளது.

அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டின் போது நிதிப் பற்றாக்குறை 4.85 லட்சம் கோடி என கூறப்பட்டது.

அதிமுக அரசால் அளிக்கப்பட்ட கடன் உத்தரவாதத்தில் 90% மின்வாரியத்துக்கே அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிய கடன்கள் எச்சரிக்கை நிலையை காட்டுகின்றன.

2020 – 2021-ல் மட்டும் தமிழ்நாடு அரசின் வருவாய் மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 8.7%-ஆக சரிந்துவிட்டது.

2008-2009 திமுக ஆட்சியின் போது மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் வருவாய் சதவீதம் 13.35-ஆக இருந்தது.

திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த உற்பத்தியில் 11.41 சதவீதமாக இருந்த வருவாய், அதிமுக ஆட்சியில் 3.8 சதவீதமாக சரிந்துள்ளது. மாநில அரசின் வரி வருவாய் படிப்படியாக குறைந்து வருகிறது.

அதிமுக ஆட்சியில் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் பாதி அளவுக்கு கூட வரி வருவாய் இல்லை.

2006-11 திமுக ஆட்சியில் 7.98%-ஆக இருந்த வரி வருவாய் அதிமுக ஆட்சியில் குறைந்து 6.15%-ஆக சரிந்து விட்டது.

கொரோனா தொற்று பாதிப்பு ஊரடங்கு உத்தரவிற்கு முன்பே தமிழ்நாடு அரசின் வருவாய் சரியத் தொடங்கியது.

வணிக வரி மூலம் கிடைக்கும் நிதி 4.49%-லிருந்து 4.19%-ஆக குறைந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக மோட்டார் வாகன வரி உயர்த்தப்படாமலேயே உள்ளது.

பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மோட்டார் வாகன வரி குறைவாக உள்ளது.

ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி 33% குறைந்துவிட்டது. மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு ஏற்ப வரியை வசூலிக்காமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரானது. வரி செலுத்த வேண்டியபவர்களிடம் இருந்து வரியை வசூலிக்காமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம். பூஜ்ய வரியால் பயனடைவது பணக்காரர்கள் மட்டுமே; ஏழைகள் அல்ல. பெரு நிறுவனங்களுக்கான வரி, வருமானவரியை குறைத்து ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு அதிகரித்திருப்பது பாதகமான செயல். ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய வரிப் பங்கு குறைந்து விட்டது. ”என்று, தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

 

error: Content is protected !!