பாதை மாறி போய் கொண்டே இருக்கும் பா.ம.க.வின் பழைய கூட்டணி வரலாறு!
கடந்த இரண்டரை மாதங்களாக அங்கே, இங்கே., எங்கே எல்லாமோ கூடி பேசி வந்த அதிமுக நேற்று அடுத்தடுத்து கூட்டணி அரிவிப்பை வெளியிட்டு ஊடகங்களை திக்குமுக்காட செய்ததுடன் அல்லோலகலப்படுத்தியும் விட்டது. ஆம்.. அதிமுக இந்த கூட்டணியை கிட்டத்தட்ட தலையில் முக்காடு போட்டுக் கொண்டு போய்தான் பேசி முடித்திருக்கிறது என்கிரார்கள். ஒரு நட்சத்தீர ஹோட்டல், ஒரு தொழிலதிபர் வீடு, மகாபலிபுரம் ரோட்டில் ஒரு ரிசார்ட் என்று சில பல இடங் களில் கூடி பல நாட்களாக நள்ளிரவு தாண்டியும் பேச்சு வார்த்தை நடத்தி தாங்கள் ஆசைப்பட்ட கூட்டணிய அமைத்து கொண்டிருக்கிரார்கள் அதிமுக நிர்வாகிகள்.
இந்த கூட்டணி உடன்பாட்டில் பாமகவுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணிதான் நேற்று முதல் சூடு பறக்கும் விவாதம் மற்றும் மீம்ஸ் டாபிக்காகி போய் விட்டது. அதுவும் நேற்று அதிமுகவுடன் இணைந்துள்ள இது மக்கள் நல கூட்டணியாகவும் மெகா கூட்டணியாகயாகவும் அமையும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இப்படி அறிவித்திருப்பதுதான் சோஷியம் மீடியாவில் பலரின் ஏளனத்துக்கு ஆளாகி வருகிறது.
இந்த பாமக 1988-ல் தொடங்கப்பட்ட போது வந்த 1989 சட்டசபைத் தேர்தலில் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. தங்கள் வன்னியர் சமுதாயத்துக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு அதரவு என்றார். மேலும் சட்டமன்றத்துக்குள்ளோ, பாராளுமன்றத்துக்குள்ளோ என் கால்களோ அல்லது மகன் உள்ளிட்ட வாரிசுகளின் காலோ படவே படாது என்றும் சத்தியம் செய்தார். அதை அடுத்து எம்ஜிஆர் காலமான பின்னர் நடந்த தேர்தலில், ஜானகியும் ஜெயலலிதாவும் தனித்தனி அணிகளாக திமுகவை எதிர்த்துநின்ற மும்முனைப் போட்டியில் பாமக பார்வையாளராக மட்டுமே இருந்தது. ஆனால், அடுத்த சில மாதங்களில் நடந்த பார்லிமெண்ட் தேர்தலில் திடீரென் தனித்துப் போட்டி யிட்டது. தமிழகம், புதுச்சேரி உள்பட 33 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக தோல்வியடைந்தாலும் சுமார் 6% வாக்குகளைப் பெற்றது.
பின்னர் 1991ல் பார்லிமெண்ட் தேர்தல், அசெம்பளித் தேர்தல் என்று இரண்டையும் ஒருசேரச் சந்தித்தது பாமக. அப்போது முஸ்லிம் லீக் கட்சி, குடியரசுக் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி ஆகியவற்றுடன் பாமக இணைந்து நின்றது. சட்ட மன்றத்துக்கு 199 தொகுதிகளிலும் மக்களவைக்கு 31 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் அப்போதைய ராஜீவ் படுகொலையின் அனுதாப அலையால் அதிமுக கூட்டணி 224 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்வெற்றி பெற்றது. மக்களவைத் தொகுதிகள் அனைத்தும் அதிமுக கூட்டணியின் வசமாயின. அந்த அலைக்கு மத்தியிலும், பண்ருட்டி தொகுதி பாமக வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். ஆளுநர் உரையில் குறுக்கிட்டதன் காரணமாக சட்ட மன்றத்தில் அவர் தாக்கப்பட்டபோது வட மாவட்டங்கள் போராட்டக் களமானது.
இதன் பின் நடந்த 1996 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் பாமகவை உள்ளடக்கிய ஏழு கட்சிக் கூட்டணியை உருவாக்கியிருந்து திமுக. தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினையால் அந்தக் கூட்டணி உடைந்தது. உடனே திவாரி காங்கிரசுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்த பாமக, 4 இடங்களில் மட்டுமே வென்றது.
மேலும் 1998ம் நடந்த பார்லிமெண்ட் தேர்தலில் அதிமுக அணியில் இணைந்தது பாமக. அக் கூட்டணியில் பாஜக, மதிமுக, தமிழக ராஜீவ் காங்கிரஸ் இருந்தன. 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4 தொகுதிகளில் வென்றது. இதை அடுத்துவாஜ்பாய் அமைச்சரவையில் பாமகவைச் சேர்ந்த தலித் எழில்மலை சுகாதாரத் துறை இணை அமைச்சரானானர். ஆனால் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதால், வாஜ்பாய் ஆட்சி 13 மாதங்களில் கவிழ்ந்தது.
பின்னர் 1999 தேர்தல் வந்த போது பாஜகவின் தேசிய ஜனநாயக அணியில் அதிமுக விலகிக் கொள்ள திமுக கூட்டணி சேர்ந்துகொண்டது. இதனால் பாமகவுக்குப் புதுச்சேரியையும் சேர்த்து 8 இடங்களில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் 5 இடங்களை வென்றது. பாமகவைச் சேர்ந்த என்.டி.சண்முகம் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராகவும் இ.பொன்னுசாமி இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்கள்.
இதை அடுத்து 2001ம் ஆண்டு அசெம்பளி எலெக்ஷனில் திமுக அணியிலிருந்து விலகி, அதிமுக வுடன் கூட்டணி சேர்ந்தது . தமிழகத்தில் 27 தொகுதிகளும் புதுச்சேரியில் 10 தொகுதிகளும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டன. தமிழகத்தில் 20 இடங்களை வென்ற பாமக, புதுச்சேரியில் படு தோல்வியடைந்தது. இதன் பின்னர் அதிமுக – பாமக கூட்டணியும் உடைந்தது.
தொடர்ந்த 2004 பார்லிமெண்ட் தேர்தலில் பாஜகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த திமுகவும் பாமகவும் கூட்டணியைவிட்டு வெளியேறின. அதை எதிர்ப்பார்த்தது போல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன. பாமக 5 தொகுதிகளை வென்றது. ஆர்.வேலு ரயில்வே துறை இணை அமைச்சரானார். ராமதாஸ் மகன் அன்புமணி ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சரானார்.
அப்புறம் 2006ம் வருடம் திமுகவுடனான மக்களவைத் தேர்தல் கூட்டணி, சட்ட மன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. 34 இடங்களில் போட்டியிட்ட பாமக, 18 இடங்களைக் கைப்பற்றியது. உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கொஞ்சம் சறுக்கல்தான். ஆனாலும் 2009ல் நடந்த பார்லிமெண்ட் தேர்தலுக்காக, அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துக்கொண்டது பாமக. ஆனால், எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.
இதை அடுத்து 2011ல் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக கட்சிகளுடன் பாமகவும் இடம் பெற்றிருந்தது. 30 சட்ட மன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு ஜஸ்ட் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
தொடர்ந்து 2014ம் ஆண்டு மாநிலத்தின் 37 தொகுதிகளை அதிமுக கைப்பற்றிய நிலையில், பாஜக கூட்டணியிலிருந்த பாமக எட்டு இடங்களில் போட்டியிட்டு தருமபுரியில் மட்டும் வென்றது. அன்புமணி ராமதாஸ், மக்களவை உறுப்பினரானார்.
ஆனால் 2016 எலெக்சன் வந்த போது திமுக, அதிமுக என்று மாறி மாறி தேர்தல்களைச் சந்தித்து வந்த பாமக, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. 4 இடங்களில் இரண்டாம் இடமும் 66 இடங்களில் மூன்றாமிடமும் பெற்றது. 2011 சட்ட மன்றத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் பாமக பெற்ற வாக்குகள் 5.23%. 2016 சட்ட மன்றத் தேர்தலில் தனித்து நின்றே பெற்றது 5.3%.
இப்போது தான் அதிமுக-வுடன் கூட்டணி வைத்துள்ளதுக்கு காரணம் தமிழ்நாட்டின் மீதான அக்கரை என்கிறார்.. அதை நம் மக்கள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பது இத்தேர்தல் முடிவில் தெரிந்து விடும்.
வாத்தியார்