நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் கடன் சுமை மற்றும் வேலை இழப்பு காரணமாக 25 ஆயிரம் பேர் தற்கொலை!

நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் கடன் சுமை மற்றும் வேலை இழப்பு காரணமாக 25 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டதாக நாடாளுமன்றத்தில் இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், கடந்த 2018-ஆம் ஆண்டு, கடன் சுமை அல்லது தொழில் நசிவு காரணமாக 4,970 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காரணத்திற்காக கடந்த 2019-ஆம் ஆண்டில் 5,908 பேரும், 2020 ஆம் ஆண்டில் 5,213 பேர் என மொத்தம் 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் வேலையின்மை காரணமாக 2018-ஆம் ஆண்டு 2,741 பேரும், 2019-ஆம் ஆண்டு 2,851 பேரும், 2020-ஆம் ஆண்டு 3,548 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார். கடன் சுமை மற்றும் வேலையின்மை காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 25 ஆயிரத்து 140 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்று இந்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.