மன உளைச்சல் காரணமாக 4 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்கள் உயிரிழப்பு!
தமிழக அரசு மதுபானக் கடைகளில் பணியாற்றுபவர்கள் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தொழிற்சங்க பயிற்சி முகாமில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் பயிற்சி முகாம் குன்னூர் புளூஹில்ஸ் வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற இறுதி நாள் நிகழ்சியில் கலந்து கொண்ட அமைப்பின் மாநிலத் தலைவர் பழனிவேலு, செயலர் கே.திருசெல்வம் ஆகியோர் செய்தியாளர்களிடம்,”டாஸ்மாக்கில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மற்ற அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு ரூ.70 ஆயிரம் என்பதை உயர்த்த வேண்டும். வார விடுமுறை வழங்க வேண்டும். கடந்த 2003-ஆம் ஆண்டில் 36 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றிய நிலையில், படிப்படியாகக் குறைந்து தற்போது, 28 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
இதில், 4 ஆயிரம் பேர் வரை மன உளைச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், பலர் பணிநீக்கம், பணியிடை நீக்கம் போன்ற அதிகாரிகளின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், மதுக்கடை பார்களில் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் தலையீடு காரணமாக வெகுவாக பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்னையில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.