பெண் வக்கீலை மணக்கும் ஆயுள் கைதிக்கு பரோலில் செல்ல அனுமதி!
தன் உறவினரான ஆயுள் தண்டனை கைதியுடன் நடக்கும் திருமணத்துக்காக 10 நாள் பரோலில் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து பெண் வழக்கறிஞரை நாளை அவர் திருமணம் செய்து கொள்வதையடுத்து மீடியாமேன்கள் வழக்கம் போல் வரவேற்பு வளையத்தை தயார் செய்து வருகிறார்கள் .
வழக்கறிஞர் அருணா என்பவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், “என்னுடைய மாமா சோமசுந்தரம் என்ற சோமு, ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனக்கும், அவருக்கும் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வியாசர்பாடியில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் நடைபெற உள்ளது.இதற்காக ஒரு மாதம் விடுமுறை கேட்டு சிறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த கண்காணிப்பாளர், திருமணம் நடைபெறும் பிப்ரவரி 2ஆம் தேதி மட்டும், அதாவது ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கியுள்ளார். திருமணத்துக்கு ஒரு நாள் விடுமுறை போதாவது. எனவே, ஒரு மாதம் விடுமுறை வழங்க கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ராஜேஷ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் கொண்ட அமர்வு, “ஆயுள் தண்டனை கைதி சோமசுந்தரம் சிறையில் ஒழுக்கமாக உள்ளதாகவும், அவர் தன்னுடைய நேரத்தை கல்வி கற்பதில் செலவு செய்வதாகவும், யோக, தியானம் உள்ளிட்ட வகுப்பிலும் தவறாமல் கலந்து கொள்வதாகவும், 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர் மீது எந்த ஒரு புகாரும் வரவில்லை என்றும் கண்காணிப்பாளர சான்றிதழ் அளித்துள்ளார். அப்படிப்பட்ட கைதியின் திருமணத்துக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்குவது போதாது என்று நாங்கள் முடிவு செய்கிறோம். எனவே, சோமசுந்தரத்துக்கு 10 நாட்கள் விடுமுறை வழங்குகிறோம்.அதாவது, பிப்ரவரி 1ஆம் தேதி மாலை 4 மணி முதல் 10ஆம் தேதி மாலை 4 மணி வரை அவருக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இதுகுறித்து புழல் சிறை கண்காணிப்பாளர் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 10 நாட்கள் விடுமுறையில் இருக்கும் சோமசுந்தரத்துக்கு தகுந்த பாதுகாப்பும் வழங்க வேண்டும்” எனக் கூறியுள்ளனர்.