பாங்காக் குண்டு வெடிப்பில் 27 பேர் உயிரிழந்தனர் : ,மோடி கண்டனம்1
மத்திய பாங்காக், வர்த்தக மையம் எதிரே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் பொது மக்கள் 27 பேர் உயிரிழந்தனர் மேலும் 20க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். குண்டு வெடிப்பில் பலியானவர் களின் உடல் பாகங்கள் சாலை முழுவதும் சிதறி சாலையே ரத்தக் காடாக காட்சியளித்தது. குண்டு வெடிப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடி குண்டு வைத்த மர்ம நபர் யார்? எந்த மாதிரியான குண்டு வைக்கப்பட்டது என்பதை பற்றி போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். 3 மிகப்பெரிய ஷாப்பிங் மால், வர்த்தக மையம் என 1000க்கும் அதிகமான பொதுமக்கள் வந்து போகும் முக்கியமான சாலையில் குண்டு வெடித்தது பொது மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
காயம் அடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மர்ம நபர்கள் 2 குண்டுகளை விட்டுச் சென்றிருக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், 2வது வெடி குண்டை கருவிகள் மற்றும் மோப்ப நாய்களை யன்படுத்தி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தி போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தாய்லாந்துக்கான இந்திய தூதர் தெரிவித்தார்.
,மேலும் இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில், ‘‘பாங்காக்கில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த அனுதாபங்கள். காயம் அடைந்தவர்கள் அனைவரும் வேகமாக குணம் அடைந்திட பிரார்த்திக்கிறேன்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.