தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு – மேலும் தளர்வுகள் = முழு விபரம்!

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு – மேலும் தளர்வுகள் = முழு விபரம்!

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 23ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தையடுத்து, தமிழகத்தில் பல முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன், ஊரடங்கு மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய்த்தொற்றுப் பரவலின் தன்மை, அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று (21.08.2021) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் முழு விவரம் பின் வருமாறு:

இருவாரங்களுக்கு நீட்டிப்பு:

நடைமுறையில் உள்ள கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் 06.09.2021 காலை 6.00 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு:

1-9-2021 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15-9-2021-க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.

மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் பின்வரும் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன.

• அனைத்து கல்லூரிகளும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

• அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் (Diploma Courses, Polytechnic Colleges) சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

திரையரங்குகள் திறப்பு

• நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன் 23-8-2021 முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும். திரையரங்கப் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதிசெய்து கொள்ளவேண்டும்.

சுற்றுலா தலங்களில் மக்களுக்கு அனுமதி

• கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள் மற்றும் சிறுவியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி/மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

கடைகளுக்கு நேரம் நீட்டிப்பு

• இதுவரை இரவு 09.00 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் 23-8-2021-லிருந்து இரவு 10.00 மணி வரை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

• தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

• அங்கன்வாடி மையங்கள் 1.9.2021 முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும். அங்கன்வாடி மைய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பது மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

போக்குவரத்துக்கு அனுமதி:

• ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும்.

• நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி மழலையர் காப்பகங்கள் (Creche) செயல்பட அனுமதிக்கப்படும். மழலையர் காப்பகங்களின் பொறுப்பாளர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

• நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

• தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

• தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் (FL 2, FL 3) செயல்பட அனுமதிக்கப்படும்.

பொது

செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பணியாளர்களும், தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் பின்வரும் முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

 கடைகளின் நுழைவு வாயிலில், கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, தானியங்கி உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

 அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

 கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

 மேற்படி விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக/இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

• நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

• கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளையும் இப்பகுதியில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், பின்வரும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

• நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

• நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.

முதலமைச்சர் வேண்டுகோள்

பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பாளர்கள் தொடர்ந்து பொதுமக்களிடையே ஏற்படுத்தி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி பெருந்தொற்று நோய் பரவலை தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் கெட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசு அளிக்கும் இந்தத் தளர்வுகளை பொதுமக்கள் முழுப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அனைத்து மக்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி, எதிர்காலம் ஆகியவை பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்று பரவல் நம் மாநிலத்தில் இல்லாத நிலையை உருவாக்க உதவிட வேண்டுமெனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்

error: Content is protected !!