தனியார் பண்பலை வானொலிகளுக்கான அலைவரிசை ஏலத்தில் எம்பூட்டு லாபம்!
“வெளிப்படையான முறையில் தனியார் பண்பலை வானொலிகளுக்கான அலைவரிசை ஏலம் நடைபெறுவதால் ஊழல் களையப்பட்டு, இதுவரை ரூ.1,150 கோடி வருமானம் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டிஜிட்டல் வடிவிலான ராமாயணத்தை தில்லியில் திங்கள்கிழமை வெளியிட்டபோது இதுகுறித்து அவர் மேலும் பேசும் போது, “லஞ்சத்தை ஒழிப்பதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று சிலர் கேட்கின்றனர். தனியார் பண்பலை வானொலிகளுக்கான முந்தைய ஒதுக்கீடுகளில் அரசு கஜானாவுக்கு ரூ.100 கோடி மட்டுமே கிடைத்துவந்தது. தற்போதைய ஒதுக்கீட்டில், வெளிப்படையான முறையில் ஏலம் நடைபெறுவதால், இதுவரை மத்திய அரசுக்கு ரூ.1,150 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஏலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஏலத்தின் விதிமுறைகள் காரணமாக, ஏலத்தில் ரூ.2,800 கோடி வரை வருமானம் கிடைக்கும் என்று தெரிகிறது.எந்த பொருளாதார சுமைகளையும் சுமத்தாமல் லஞ்சத்தைக் குறைத்து, வெளிப்படையான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம், நாட்டின் வளர்ச்சிக்கான பணம் கிடைக்கிறது என்பதற்கு இந்த ஏலமே உதாரணமாகும்” என்றார் பிரதமர் மோடி.