ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு: கர்நாடக அரசு முடிவு!
சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
அம்மாநிலத்தில் இன்று முதல் அமைச்சர் சித்தராமைய்யா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அதையடுத்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 11-ம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்து கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சிகள் கூறி வந்தன. ஆனால் நீதிமன்ற தீர்ப்பை ஏற்கவேண்டும் என்றும், மக்கள் ஆதரவு பெற்ற ஜெயலலிதாவுக்கு எதிராக அப்பீல் செய்யக்கூடாது என கர்நாடக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் எம்.வி. ராஜசேகரன், சி.எம். இப்ராகிம் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் தற்போது கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.