சியாச்சின் பனிச் சிகரம் , – கொஞ்சம் அடிசினல் தகவல்
போன வாரம் சியாச்சின் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் நமது இந்திய ராணுவ காவல் சாவடியே பனியில் புதைந்தது. இதனால் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ராணுவ அதிகாரி உள்பட 10 வீரர்கள் பனியில் புதைந்தனர். இவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா என்ற வீரர் மட்டும் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப் பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சியாச்சின் பனிமலை பிரதேசம் உலகில் துருவப் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ளவை களில் இரண்டாவது மிகவும் நீளமான பனிமலை பிரதேசம். அது நூப்ரா மற்றும் ஷையோக் நதிகளால் உருவானது. ஷையோக் நதியிலிருந்து உருகும் பனியினால் ஆன நீர் தான் சிந்து நதியின் மூலமாக இருக்கிறது. அங்கு குளிர் காலங்களில் மைனஸ் – 50 டிக்ரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். அதனால் அப்பகுதியில் எல்லை பாதுகாப்பு என்பது மிகவும் கடினமான ஒன்று. இதை பயன்படுத்தி பாகிஸ்தான் அந்த பகுதியை தனது என கூறியது.
அத்தகைய புகழ் பெற்ற பகுதியில் உள்ள பனிமலை சிகரங்களில் பல மலையேற்ற வீரர்கள் ஏறுவதற்கு பாகிஸ்தான் அரசினை அனுமதி கேட்டனர். அரசும் அவர்களுக்கு அனுமதி அளித்தது. அவர்களும் பாகிஸ்தானின் அனுமதியுடன் அந்த பகுதிக்கு வந்து மலை ஏற முயன்றனர். அதே நிலை தொடர்ந்த தால் மெல்ல மெல்ல அப்பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது பாகிஸ்தான். அமெரிக்கா வின் உதவியுடன் தனது தேசிய வரை படத்தையும் திருத்தி வெளியிட்டுக் கொண்டது.இதனை அறிந்த இந்திய அரசு, 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி “Operation Meghdoot” என்ற திட்டத்தினை செயல்படுத்தியது. அதன்படி, கலோனல் N. குமார் அவர்களின் தலைமையில் ஒரு பட்டாளத்தை அனுப்பி அப்பகுதியில் இருந்த பாகிஸ்தானியர்களை முழுவதுமாக விரட்டி, அப்பகுதியில் முழு பாது காப்பிற்கு வித்திட்டது. அப்பகுதியை சேர்ந்த 900 சதுர மைல்கள் முழுவதுமாக இந்தியா வசம் மீண்டும் வந்தது.
முன்னரே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலை காரணமாக அப்பகுதியில் ஒருவரால் தொடர்ந்து பணியாற்ற இயலாதாகையால் வீரர்கள் சுழற்சி முறையில் அங்கு பணியாற்றுகிறார்கள். அப்பகுதியில் காவலில் இருக்கும் பொழுது நமது வீரர்கள் தட்ப வெட்பம் காரணமாகவோ இல்லை எதிரிகளின் தாக்குதல் களிலோ இறந்தால் அவர்களின் சடலங்களுக்கு அங்கேயே வீர மரியாதை அளிக்கப்பட்டு எரியூட்டப் படுகிறது.ஏனென்றால் அங்கிருந்து அவர்களின் சடலங்களை எடுத்து செல்வது கடினம்.இவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், இன்றும் அப்பகுதியில் பணியாற்றுவதை நமது வீரர்கள் மிகப் பெரும் கவுரவமாக கருதுகிறார்கள்
இந்நிலையில் சியாச்சின் பனிச்சிகரத்தில் இதுவரை குறைந்தது 997 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகி யுள்ளனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இவர்களில் எதிரியின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு பலியானவர்களின் எண்ணிகை வெறும் 220 மட்டும் தான். மீதமுள்ள அனைவரும் பனிப்புயல், பனிச் சரிவு, விபத்து மற்றும் உடல் நல குறைபாடு காரணமாகவே மட்டும்தான் உயிரிழந்துள்ளனர்.
சியாச்சின் பகுதியை 1984-ம் ஆண்டு முதல் இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இங்கு பாகிஸ்தான் -இந்திய ராணுவத்திற்கும் இடையில் நடக்கும் மோதலில் இரு நாட்டு வீரர்களும் பலியாகி வந்தனர்.இதனை தடுக்கும் வகையில் 2003-ம் ஆண்டு இரு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தம் செய்யப் பட்டது. இந்த ஒப்பந்ததிற்கு பிறகு இந்திய தரப்பில் ஒரு ராணுவ வீரர் கூட மோதல் காரணமாக உயிர் இழக்கவில்லை. ஆனால் கடந்த வாரம் நடந்த பனிச்சரிவு போன்ற சம்பவங்களால் தொடர்ந்து இந்திய வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். பாகிஸ்தான் தரப்பிலும் பனிச்சரிவு போன்ற சம்பவங் களால் 2003 முதல் 2010 வரையிலான கால கட்டத்தில் 213 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்
என்பது குறிப்பிடத்தக்கது .