சர்வதேச பணக்காரர்கள் பட்டியலில் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் கெளதம் அதானி 3வது இடத்தைப் பிடித்தார்!
உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார் தொழிலதிபர் கெளதம் அதானி. ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர் பட்டியலில் 3வது இடம் பிடிப்பது இதுவே முதல்முறை ஆகும். எலான் மஸ்க், ஜெஃப் பெசாஸ் ஆகியோர் முதல் மற்றும் 2வது இடத்தைப் பிடித்துள்ளனர். 137.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் அதானி 3வது இடத்தைப் பிடித்துள்ளார். பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்டை முந்தி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய அரசின் ஒத்துழைப்புடன் கெளதம் அதானி கடந்த சில ஆண்டுகளாக பிரம்மாண்ட வளர்ச்சியை அடைந்து வருகிறார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், எரிசக்தி, தொலைதொடர்பு, துறைமுகம், விமான நிலையம் என பல துறைகளில் கால்பதித்து வருகிறது அதானி குழுமம். தொடர்ந்து முன்னேறிய அதானி, கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானியை முறியடித்தார்.
ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்தார். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 10வது இடத்தில் இருந்த அதானி, தொடர்ந்து முன்னேறி கடந்த ஜூலை மாதம் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி 4ஆவது இடத்துக்கு முன்னேறினார். இப்போது 3 வது இடத்தில் இருந்த பிரான்ஸ் தொழிலதிபரை பின்னுக்குத் தள்ளி 3 வது இடத்திற்கு அதானி முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.