அய்யா.. விமானத்தைக் காணோம்! – போலீசில் கமாண்டர் புகார்

அய்யா.. விமானத்தைக் காணோம்! – போலீசில் கமாண்டர் புகார்

மாயமான கடலோர காவல்படை விமானம் மற்றும் 3 விமானிகளை கண்டு பிடித்து தரக்கோரி விமான நிலைய போலீசில் கடற்படை கமாண்டர் புகார் செய்து உள்ளார்.
tn police 19
சென்னையில் இருந்து கடந்த 8-ந் தேதி புறப்பட்டு சென்ற கடலோர காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் மாயமானது. அதில் பயணம் செய்த விமானிகள் சுபாஷ்சுரேஷ், எம்.கே.சோனி, கமாண்டர் வித்யாசாகர் ஆகியோரும் மாயமானார்கள். 3 பேருடன் மாயமான விமானம், கடலில் விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விமானம் மற்றும் விமானிகளை கடந்த 10 நாட்களாக தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடலூர் அருகே நடுக்கடலில் எண்ணெய் படலமாக இருந்ததால் அங்கு விமானம் விழுந்து இருக்கிறதா? எனவும் தேடி வருகின்றனர். கருப்பு பெட்டியின் சிக்னல் கிடைத்து இருப்பதாகவும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் மாயமான விமானம் மற்றும் விமானிகள் குறித்து இதுவரையிலும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.மாயமான தங்களது கணவர்களை கண்டுபிடிக்க பிரதமர் நேரிடையாக தலையிட்டு உதவிட வேண்டும் என மாயமான விமானிகளின் மனைவிகள் சமூகவலை தளங்களில் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதற்கிடையில் கடந்த 16-ந் தேதி இரவு பரங்கிமலை கடற்படை கமாண்டர் சந்தீப்சோப்ரா, விமான நிலைய போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கடந்த 8-ந் தேதி மாலை 6 மணியில் இருந்து கடற்படை விமானம் மற்றும் அதில் சென்ற விமானிகள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த வித்யாசாகர், மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த எம்.கே.சோனி, சென்னை தில்லைகங்கா நகரை சேர்ந்த சுபாஷ்சுரேஷ் ஆகியோர் மாயமாகி உள்ளனர். இவர்களை கண்டுபிடித்து தருமாறு கூறி இருந்தார்.

இது பற்றி விமான நிலைய போலீசார், உயர் அதிகாரிகள் மற்றும் அரசு வக்கீல்களுடன் ஆலோசனை செய்தனர். பின்னர் 1934 விமான சட்டம், விமானங்கள் மாயமாவது மற்றும் விபத்துக்குள்ளாவது பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.மேலும் விமானம் எங்கிருந்து புறப்பட்டு சென்றது. கடைசியாக எந்த விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் பேசினார்கள்? என்ன பேசப்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானம் மாயமாகி கடந்த 10 நாட்களுக்கு பிறகு தற்போது போலீசில் புகார் செய்யப்பட்டு இருப்பதற்கு என்ன காரணம்? இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விமான நிலைய போலீஸ் வரலாற்றில் விமானம் மற்றும் விமானிகள் மாயமானதை கண்டுபிடித்து தருமாறு கொடுக்கப்பட்ட முதல் புகார் இது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!