ஸ்கைப்பில் எஜமானர்களோடு பேசும் நாய்கள்!

சென்னையில் செல்லப்பிராணிகளை வளர்ப்போர், வெளியூர் செல்லும்போது அவற்றை நாய்கள் காப்பகத்தில் விட்டு செல்கின்றனர். அதற்காக தினசரி 500 ரூபாய் வாடகையை செலுத்தி வருகின்றனர். அதேநேரம், அவற்றை தினசரி பார்க்க முடியாமல் வளர்த்தவர்களின் தவிப்பை போக்கும் விதத்தில், நாய்களும், அவற்றின் எஜமானர்களும், இணையத்தில் பேசும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைகொடுக்கும் இணையம்:
சென்னை உத்தண்டியில் நவீன நாய்கள் காப்பகம் நடத்தி வருகிறார் ஷ்ரவன், 21. அவர் கூறுகையில், பலர் தங்கள் நாய்களை சொந்த குழந்தையை போலவே நினைக்கின்றனர். நாயை நல்ல காப்பகத்தில் விட்டுவிட்டோம் என்ற திருப்தி இருந்தாலும், அது எப்படி உள்ளது என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். அதற்கு இணையம் கைகொடுக்கிறது, என்கிறார். பல்வேறு காரணங்களுக்காக, குறிப்பாக, வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழல், வீட்டில் நிகழும் திருமணம் அல்லது பிற சம்பவங்கள், போன்ற பல்வேறு சூழல்களில், அந்த காப்பகத்தில் நாய்களை விடுபவர்கள் பல்வேறு காரணங்களுக்காக, நாய்கள் காப்பகத்தில் விடப்படுகின்றன.
மேலும், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இந்தியாவிற்கு வந்து, வீடு தேடு வோரும் தங்கள் நாய்களை இங்கே விட்டு செல்கின்றனர். அப்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு லண்டனில் இருந்து வந்த தம்பதியர், தங்களின் செல்ல நாயான ஜிப்சியையும் கொண்டு வந்து இங்கு விட்டுள்ளனர்.
இதுகுறித்து ஷ்ரவன் கூறுகையில், இது லண்டனில் பிறந்து அங்கேயே வளர்ந்த நாய். ஷீட்சூ எனப்படும் நாய் இனத்தை சேர்ந்தவை. சென்னையில் இப்போது இந்த வகை நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முடி வளர்ந்து கொண்டே இருக்கும். அதை ஜடை போல் பின்னி அதன் உரிமையாளர்கள் அழகு பார்ப்பர், என்றார். அதனுடன், உள்ளூர் பக் வகை நாயென்று அங்குமிங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
பதில் எப்படி?
அவர் மேலும், கூறுகையில், இந்த பக் வகை நாயை வளர்த்தவரின் மனைவி, தற்போது கேரளாவில் உள்ளார். அவர் நாயை பார்க்க ஸ்கைப் மூலம் வீடியோ காலிங்’கில் பேசுவார். அவர் அப்போது நாயை பார்க்க விரும்பினால், நாயை கணினியின் அருகில் கொண்டு செல்வேன். அவர் நாயிடம் நலம் விசாரிப்பார். அவர் கேள்வி கேட்கும் போது நாயும் பதிலுக்கு குரைத்து பதில் சொல்லும், என்கிறார். மேலும், எல்லா நாய்களையும் காப்பகத்தில் எடுத்து கொள்வதில்லை என்கிறார் ஷ்ரவன். நாய்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் தடுப்பூசி போடப்பட வேண்டும். அதுதவிர, நாயை மற்ற நாய்களுடனும், மனிதர்களுடனும் பழக விட வேண்டும். நாய்களை காப்பகத்திற்கு விட விரும்பினாலும், அது ஆபத்தில்லாத நாய் என, டாக்டரின் கடிதம் தரப்பட வேண்டும். மேலும், தடுப்பூசி போடப்பட்டதற்கான ரசீதையும் காட்ட வேண்டும். அதன்பிறகே நாய்களை எடுத்துக் கொள்வோம்,’’ என்றார்.
வரவேற்பு:
இந்த நாய்கள் காப்பகத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என, கேட்டபோது, நாய்களை 24 மணி நேரமும் ஏசி அறையில் முதலில் வைப்போம். பின், உணவு அளித்து பழக்கப்படுத்துவோம். கடந்த 6 மாதங்களில் 600 நாய்கள் வரை வந்து போயுள்ளன. தினசரி பராமரிப்பு செலவு 500 ரூபாய் என்பதை நாய் பிரியர்கள் பெரிய செலவாக நினைப்பதில்லை, என்றார்.