செய்தியைக் கேட்க / Listen to News
விரூபாக்ஷா என்றால் சிவன் என்று அர்த்தமாம். தீய சக்திக்கும், நல்ல சக்தியும் இடையே நடக்கும் போட்டியை விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லராகவும், திகில் ஜானர் படமாகவும் கொடுக்க இயக்குநர் கார்த்திக் வர்மா டண்டு முயற்சித்திருக்கிறார்.ஆனால் ஜெயிக்கவில்லை என்பதுதான் சோகம்.

1979 ல் படம் தொடங்குகிறது. ஒரு மந்திர வாதி ஒரு சிறுமியின் சடலத்தை வைத்து தன் வீட்டில் சில சடங்குகளை செய்கிறார். இதை பார்க்கும் ஊர் மக்கள் அந்த மந்திர வாதியை தவறானவர் என்று எண்ணி மந்திரவாதியையும், இவரது மனைவியையும் உயிரோடு மரத்தில் கட்டி கொளுத்தி விடுகிறார்கள். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்பு 1991 ல் அந்த கிராமத்தில் துர்மரணங்கள் நிகழ்கிறது. ஊர் கோவில் பூசாரி ஊரை விட்டு மக்கள் வெளியில் செல்லக் கூடாது என்று தடை விதிக்கிறார். இருப்பினும் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் இதற்கு காரணம் கண்கள் மூலம் செய்யும் வசியம் என்று கண்டுபிடிக்கிறார் நம் ஹீரோ. இதற்கான காரணங்களும், இந்த கொலை, தற்கொலைகளை முறியடிக்கும் முயற்சிதான் கதையின் மையமாக உள்ளது. அதர்வண வேதத்தில் உள்ள தாந்த்ரீக விஷயங்களை எடுத்து நமக்கு புரியும் படியாக சொல்லி உள்ளார் டைரக்டர்.
ஹீரோவாக நடித்திருக்கும் சாய் தரம் தேஜ், சிரஞ்சீவி குடும்ப வாரிசு என்று முகத்தை பார்க்கும் போதே தெரிகிறது. தனக்கு கொடுத்த வேலை குறைவு என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருப்பவர், தனது குறைவான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சம்யுக்தா மேனன், கமர்ஷியல் நாயகியாக அல்லாமல் கதையில் முக்கியத்துவம் உள்ள வேடத்தில் அழுத்தமாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் அழகியாக வலம் வருபவர் இரண்டாம் பாதியில் அதிரடியில் மிரட்டியிருக்கிறார்.
சுனில், பிரம்மாஜி, ராஜீவ் கனகலா, அஜய், ரவி கிருஷ்ணா என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சம்தத் சைனுதீனின் பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது. கதாபாத்திரங்களை அழகாக காட்டி ரசிக்க வைத்திருக்கும் ஒளிப்பதிவாளர் திகில் காட்சிகள் மூலம் மிரட்டவும் செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் ஒரே ஒரு பாடல் இடம்பெற்றாலும் ரசிக்க வைக்கிறது. காதல் காட்சிகளில் இடம்பெறும் பீஜியம் மனதை வருட செய்வது போல், திகில் காட்சிகளில் இடம்பெறும் பின்னணி இசை பட படக்க வைக்கிறது.
தெலுங்கின் பிரபல இயக்குநர் சுகுமாரின் திரைக்கதைக்கு தமிழில் வசனங்கள் எழுதிய வி.பிரபாகர் புதுவண்ணம் தருகிறார்.இயக்குநர் கார்த்திக்வர்மா டண்டூ, பழகிய கதை பார்த்த காட்சிகள் ஆகியவை பெரும்பான்மையாக இருப்பதால் கொட்டாவி வருவதை தவிர்க்க இயலவில்லை
மொத்த்தில் இந்த விரூபாக்ஷா – மிடில் கிளாஸ் சந்திரமுகி
மார்க் 2/75/5
