ராஜேந்திரசோழன் அரியணை ஏறி 1000 ஆண்டு: கொண்டாட முடிவு!
தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ஸ்ரீஸ்ரீ ராஜராஜசோழனின் புதல்வன் ராஜேந்திரசோழன், தனது (கி.பி. 1012-1044) ஆட்சி காலத்தில், கங்கை கரை வரை படையெடுத்து சென்று வென்று, பீடு கொண்டதன் அடையாளமாக, கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கி, அங்கு தஞ்சாவூர் பெரிய கோவில் வடிவமைப்புடன் கூடிய பிரகதீஸ்வரர் கோயிலையும் கட்டினான். தமிழகத்திலேயே மிகப் பெரிய சிவலிங்கம் இங்கு தான் உள்ளது. தஞ்சை பெரிய கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் உள்ளது. கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் உள்ளது. ஆவுடையை சுற்றி சாரம் கட்டி, அதன் மீது நின்று பூசை செய்கின்றனர். ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக காட்சி தருகின்றார். தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆண் அம்சம். இங்குள்ள பிரகதீஸ்வரர் லிங்கம் பெண் அம்சமாகும்.இதனிடையே ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டை கோலாகலமாகக் கொண்டாட, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர். இதற்காக ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அன்று, அதாவது வரும் ஜூலை மாதம் 24 மற்றும் 25-ம் தேதிகளில் வரலாற்று அறிஞர்களின் கருத்தரங்கம், புகழ்பெற்ற நடனக் கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்த சுற்றுவட்டார கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கங்கைகொண்ட சோழபுரம். 11ம் நூற்றாண்டு முதல் 14ம் நூற்றாண்டு வரை பரந்து விரிந்திருந்த சோழ பேரரசின் தலைநகராகவும் இவ்வூர் விளங்கியது.தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன், தனது (கி.பி. 1012-1044) ஆட்சி காலத்தில், கங்கை கரை வரை படையெடுத்து சென்று வடபுலத்து மன்னர்களை வெற்றி கொண்டதன் அடையாளமாக, கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கி, அங்கு தஞ்சாவூர் பெரிய கோவில் வடிவமைப்புடன் கூடிய பிரகதீஸ்வரர் கோயிலையும் கட்டினான்.இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள, 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம் தான், உலகிலேயே மிக பெரிய சிவலிங்கம் என போற்றப்படுகிறது.
வேறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில், இக்கோவில் கருவறை சுவரில் பதிக்கப்பட்டுள்ள சந்திரகாந்த கல், வெயில் காலத்தில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் இதமான வெட்பத்தையும் வெளியிட்டு கொண்டிருக்கிறது. இக்கோவிலில் சரஸ்வதியும், லெக்ஷ்மியும், தியான கோலத்தில் அமர்ந்துள்ளதால், ஞான சரஸ்வதி, ஞான லெக்ஷ்மி என அவர்கள் அழைக்கப்படுகின்றனர்.தற்போது ஐ.நா., சபையின் யுனெஸ்கோ அமைப்பால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டை கோலாகலமாகக் கொண்டாட, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர். இதற்காக ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அன்று, அதாவது வரும் ஜூலை மாதம் 24 மற்றும் 25-ம் தேதிகளில் வரலாற்று அறிஞர்களின் கருத்தரங்கம், புகழ்பெற்ற நடனக் கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்த சுற்றுவட்டார கிராம மக்கள் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.