மெக்கா மசூதியில் கிரேன் முறிந்து விழுந்து விபத்து 107 பேர் பலி 200 பேர் படுகாயம்
சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவுக்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ‘ஹஜ்’ புனித பயணம் செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான ‘ஹஜ்’ பண்டிகை, 24–ந் தேதி தொடங்குகிறது. இருப்பினும், முன்னதாகவே, பல நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் மெக்கா நகருக்கு சென்றவண்ணம் உள்ளனர். வழக்கம்போல், இந்த ஆண்டும் லட்சக்கணக்கானோர் மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் திரண்டு தங்கள் ‘ஹஜ்’ கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக, அந்த மசூதியில் கட்டிடத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அப்பணிக்காக மிகப்பெரிய கிரேன் ஒன்று மசூதி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மெக்கா நகரில், நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் என்று முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தது. எதிர்பார்த்தது போலவே, நேற்று இரவு பலத்த காற்று வீசியது.
அதைத் தொடர்ந்து, பெரிய மசூதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன், காற்றின் வேகத்தால் திடீரென முறிந்து விழுந்தது. மசூதியின் கூரைப்பகுதியில் பலத்த சத்தத்துடன் விழுந்தது. அதனால், கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது.இதனால், மசூதிக்குள் இருந்த நூற்றுக்கணக்கான ‘ஹஜ்’ யாத்ரீகர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த கோர விபத்தில், 107 யாத்ரீகர்கள் பரிதாபமாக பலியானார்கள். 200–க்கும் அதிகமானோர் பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்தவுடன், சவுதி செம்பிறைச் சங்கத்தைச் சேர்ந்த மீட்பு மற்றும் நிவாரண படையினர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்கள், ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி கிடந்தன. அந்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகின. அவை, பார்த்தவர்களின் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தன.