மாணவர்கள் இலக்கணத்தை வெறுப்பதற்கான காரணங்கள்!

மாணவர்கள் இலக்கணத்தை வெறுப்பதற்கான காரணங்கள்!

நாம் ஆராய்ந்துகொண்டிருக்கும் தலைப்பில் ஒரு அருமையான கட்டுரை வாசித்தேன்.’உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலக்கணம் கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் இந்த மொழி ஆய்வாளர் எழுதிய கட்டுரை. அதன் ஒரு பகுதியை மட்டும் இங்குப் பகிர்கிறேன்.

மூன்றாவது, நான்காவது வகுப்புகளில் ஒருமை, பன்மை, பெயர்ச்சொல், வினைச்சொல் போன்றவைகளை மட்டும் கற்பித்துவிட்டு, ஐந்தாம் வகுப்பிலிருந்து மெள்ள மரபிலக்கணத்தைத் தொடங்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.குறிப்பிட்ட இந்தப் பகுதியை நீங்கள் வாசிப்பது பயனளிக்கும்.

மாணவர்கள் இலக்கணத்தை வெறுப்பதற்கான காரணங்கள்:

1 தொடக்க வகுப்புகளிலேயே இலக்கணத்தைத் தொடங்குவது.

2 விதிகளையும், நூற்பாக்களையும் முதற்கண் கூறிப் பின் எடுத்துக் காட்டுகளால் விளக்கும் விதிவிளக்கு முறையை இலக்கணப் படிப்பில் மேற்கொள்வது. தெரிந்ததிலிருந்து தெரியாததற்கும், எளியதிலிருந்து கடினமானவற்றிற்கும், தெளிவிலிருந்து சிக்கலுக்கும் போகவேண்டும் என்னும் அடிப்படையான கல்விபற்றிய கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாகக் கற்பிக்க பெறுவது.

3 எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற முறையில் இலக்கணத்தை கற்பிப்பது. இம்முறை காரண காரிய முறைக்கு ஒத்ததெனினும் கீழ் வகுப்புக்களுக்குப் பொருந்தாததோடு உளநூல் முறைக்கும் ஏற்றதன்று.

4 இலக்கணத்தை மொழிப் பாடத்துடனும், கட்டுரையுடனும் பொருத்திக் காட்டாமல் தனிப்பாடமாக நடத்துவது.

5 நடைமுறையில் வேண்டியது வேண்டாதது என்று இல்லாமல் எல்லா விதிகளையும் கற்பிப்பதோடு அவற்றை மாணாக்கர்களிடம் மனப்பாடம் செய்ய வற்புறுத்துவது.

6 எடுத்துக்காட்டுகள் கூறும் போது மாணாக்கர்தம் வாழ்க்கையில் அவர்கள் அறிந்திருக்கக் கூடிய சொற்களைப் பொறுக்கி எடுக்காமல் பழைய இலக்கண நூல்களில் கூறியுள்ள சாத்தா, பூதா, தேவா, கொற்றா போன்ற பயன்பாட்டில் இல்லாதச் சொற்களைக் கூறி வகுப்பைச் சுவையற்றதாக்கிவிடுவது.

7 எடுத்துக்காட்டுக்களை மிகுதியாக காட்டாமல் இருப்பது.

8 மாணாக்கர் ஒவ்வொருவரையும் அவர்தம் வாக்கிலேயே இலக்கண குறிப்பு முதலியவற்றை வைத்து வழங்க பயிற்றாமை.

9 இலக்கணத்தில் எழுத்து பயிற்சிகளை மிகுதியாக அளிக்காமை.

10 இலக்கணத்தை ஒரு கருவியாக மட்டும் கருதாமல் இலக்கண அறிவைத் தனியாகப் பெற்றிருப்பதே முடிந்த குறிக்கோளும் பயனும் என்று நினைப்பது.

11 விளையாட்டு, தனித்தனிப் பயிற்சி முறைகளை இலக்கணப் படிப்பில் புகுத்தாமை.

12 தேர்வை முதன்மையாகக் கொண்டிருக்கின்ற இன்றைய பாடத்திட்டத்தில் இலக்கணப் பகுதிகளில் மதிப்பெண் பெறாமலேயே ஒருவர் வெற்றி பெற வாய்ப்புண்டு, அதனால் மாணவர்கள் பிற பகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்தி இலக்கணத்தை அலட்சியப்படுத்துகின்றனர். இத்தகைய அலட்சிய மனப்பான்மையே இலக்கணத்தை வெறுக்கத் தூண்டுகிறது.

இரா.தனலெட்சுமி
முனைவர் பட்ட ஆய்வாளர்
இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

ஜேம்ஸ் வசந்தன்

error: Content is protected !!