மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்காக பிரசாரம்!- பண்ருட்டி ராமச்சந்திரன்
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்காக பிரசாரம் செய்வேன் என்று மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும், எந்தெந்த லட்சியங்களுக்காக பேரறிஞர் அண்ணா தன் வாழ்க்கையை அர்ப்பணித்தாரோ அதேபோன்று, முதலமைச்சர் ஜெயலலிதாவும் தனது வாழ்வை அர்ப்பணித்து பணியாற்றுவதாக அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் இன்று விருதைப் பெற்றுக்கொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அண்ணா மீது கொண்டிருந்த ஈடுபாட்டால் அரசியல் வாழ்விற்கு உந்தப்பட்டேன். இதனால் நான் வேலை பார்த்து வந்த உதவிப் பொறியாளர் பதவியை 1964–ம் ஆண்டிலேயே ராஜினாமா செய்தேன். அண்ணாவின் தலைமையை ஏற்று அரசியலில் ஈடுபட்டேன். அவரது எண்ணங்களுக்கும் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பாடுபட்டேன். இதற்கு மதிப்பளிக்கும் வகையில் அண்ணா விருது எனக்கு கிடைத்துள்ளது.
அண்ணாவை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டோம் என்ற வகையில் முதல்வர் ஜெயலலிதா எனக்கு இந்த விருதை வழங்கியுள்ளார். என்னைப் போன்ற எண்ணற்ற அண்ணாவின் தம்பிகளுக்கு முதல்வர் நம்பிக்கை ஒளி ஏற்றுவார் என நம்புகிறேன். எந்தெந்த லட்சியங்களுக்காக அண்ணா தன் வாழ்க்கையை அர்ப்பணித்தாரோ அதேபோல் முதல்வரும் தனது வாழ்வை அர்ப்பணித்து பணியாற்றுகிறார்” என்றார்.
அண்ணா விருது கிடைத்துள்ளதற்கு அரசியல் சாயம் பூசுவார்கள் என்று கருதுகிறீர்களா? என்றதற்கு, “பேரறிஞர் அண்ணா எல்லோருக்கும் பொதுவானவர். அவரது வழியில் அரசியல் நடத்திய எனக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்களா? என்று கேட்டதற்கு, “ஆமாம். நம்மால் முடிந்த ஆதரவை செய்ய வேண்டும். இந்திய அரசியலில் ஒரு மாற்றம் உருவாகக் கூடிய சூழ்நிலை உள்ளது.
தேசிய அளவில் அண்ணாவின் முற்போக்கு கொள்கை ஏற்பட என்னால் முடிந்த ஆதரவு உண்டு. எண்ணைச் சட்டியில் இருந்து தப்பிக்க எரி நெருப்பில் விழுந்த கதையாக ஆகிவிடக் கூடாது. எனவே, ஏழை எளிய மக்களுக்காக யார் பாடு படுகிறார்களோ, அவர்களை ஆதரிக்க அனைவரும் முன் வரவேண்டும்; இந்திய அரசியலில் நல்ல மாற்றம் அமைய வேண்டும்” என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.


