June 7, 2023

பள்ளி & கல்லூரிகளில் பர்தா, காவி உடை சர்ச்சை: கர்நாடகா அரசு அதிரடி உத்தரவு!

ர்நாடகாவில் ஹிஜாப் எனப்படும் பர்தா அணிந்து கல்வி நிலையங்களுக்கு வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதும், பர்தாவுக்கு போட்டியாக காவி உடையணிந்து சில மாணவி, மாணவியர் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்ததும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், பள்ளி, கல்லூரிகளில் சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் ஆடைகளுக்கு தடை விதிப்பதாக கர்நாடக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநில அரசின் கூற்றுப்படி, பர்தா அணிந்து வகுப்பறைகளில் நுழைவதைத் தடை செய்வது, அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள மதச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாக இல்லை என தெரிவித்துள்ளது. கர்நாடகா கல்விச் சட்டம்-1983 இன் 133 (2)படி, கல்லூரி மேம்பாட்டுக் குழு அல்லது நிர்வாகத்தின் மேல்முறையீட்டுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட உடையை மாணவர்கள் அணிய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து வருவதை கண்டித்து சில இந்து மாணவ, மாணவியர் காவித் துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். உடுப்பில் உள்ள குண்டாபூர் நகரில் செயல்படும் அரசு பள்ளி ஒன்று மாணவிகள் பர்தா அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது. எனினும், மாணவிகள் பர்தா அணிந்தே பள்ளிக்கு வந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் பள்ளி வளாகத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. பர்தா அணிந்தே பள்ளிக்கு வருவோம் என்று அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர். தற்போது இந்த உடை சர்ச்சை கல்லூரிகளுக்கும் பரவியுள்ளது. கல்லூரிகளுக்கு இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவிகளில் ஒருசிலர் காவித் துண்டு அணிந்து கல்லூரிகளுக்கு வரத் தொடங்கியுள்ளனர். கர்நாடகாவில் ஆடை தொடர்பாக கல்வி நிலையங்களில் எழுந்துள்ள இந்த பிரச்சனை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இதையடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பள்ளி, கல்லூரிகளில் சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் ஆடைகளுக்கு தடை விதிப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், ” மாணவர்கள் ஒரே மாதிரியான ஆடைகளை கட்டாயமாக அணிய வேண்டும். அதே சமயம், தனியார் பள்ளி நிர்வாகம் தங்களுக்கு விருப்பமான சீருடையை தேர்வு செய்து கொள்ளலாம். நிர்வாகக் குழு சீருடையைத் தேர்வு செய்யாத பட்சத்தில், சமத்துவம், ஒருமைப்பாடு, பொதுச் சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் ஆடைகளை அணியக் கூடாது” குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக்கும்.