டெல்லியில் ஆட்சி அதிகாரம் யாருக்கு? சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

ஒரு மாநிலத்தில் குறிப்பாக டெல்லியில் அதிகாரம் யாருக்கு என்ற வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு மத்திய அரசு சட்டப்பேரவை விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார். அத்துடன் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே நிர்வாக அதிகாரம் உண்டு. மாநில அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் தீர்மானத்திற்கு துணை நிலை ஆளுநர் கட்டுப்பட்டவர் என 5 உறுப்பினர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் 3 நீதிபதிகள் இன்று பெரும்பான்மையாக தீர்ப்பளித்தனர்.
புதுடெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், மத்திய அரசின் துணை நிலை ஆளுநர்தான் பெரும்பாலான நியமனங்கள், முடிவுகளை எடுத்து வந்தார். இதனால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே மோதல்கள் இருந்து வந்தன.
அங்கு அமைச்சரவை எடுக்கும் எந்த முடிவையும் டெல்லி துணை ஆளுநர் செயல்படுத்த விடுவதில்லை. ஜனநாயகத்தை டில்லி துணைநிலை ஆளுநர் சீரழிப்பதாக ஆம்ஆத்மி அரசு குற்றஞ்சாட்டியது. இதனால், டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் இருக்கிறது என விளக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ரோஹினி மற்றும் நீதிபதி ஜெயந்த் நாத், கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி தீர்ப்பளித்தனர். அதில் அரசியலமைப்பு சட்டப்படி டெல்லியில் துணை நிலை ஆளுநர்தான் நிர்வாகத்தின் தலைவர். அமைச்சரவையின் பரிந்துரைப்படி, ஆலோசனைப்படி அவர் செயல்படலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த இந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏகே.சிக்ரி, ஏஎம்.கான்வில்கர், டிஒய்.சந்திரசூட், அசோக்பூஷன் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
இந்த அமர்வு,”மற்ற யூனியன் பிரதேசங்களை காட்டிலும் டெல்லியின் துணை நிலை ஆளுநருக்கு அதிக அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. துணை நிலை ஆளுநர்களுக்கு குடியரசு தலைவருக்கு உள்ள அதிகாரங்களில் பாதி உள்ளது. எனினும் அவருக்கு தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் இல்லை. அவர், மாநில அமைச்சரவையுடன் ஆலோசித்துதான் முடிவுகள் எடுக்க வேண்டும். ஒரு பிரச்சினையில் மாற்று கருத்து இருந்தால், அந்த விஷயத்தை குடியரசு தலைவரிடம் எடுத்துச்செல்லலாம்” இன்று அமர்வு கூறியிருந்தது. ஆனால் எல்லா பிரச்சினைகளையும் குடியரசுத் தலைவரிடம் கொண்டு செல்ல வேண்டியதில்லை.
இந்நிலையில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதில்,”மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டாட்சி தத்துவப்படி ஒன்றிணைந்து அரசியல சட்டத்துக்கு இணக்கமாக செயல்பட வேண்டும். மக்களின் பிரதிநிதிகள் மக்களின் கேள்விக்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள். அரசியல் சாசனத்தை மதிக்கும் வகையில் அனைவரின் செயல்பாடுகளும் இருக்க வேண்டும். மக்கள் நல திட்டங்கள் தாமதமானால் அதற்கு துணை நிலை ஆளுநர் மற்றும் டில்லி மாநில அரசு ஆகிய இருவருமே பொறுப்பு” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார்.
”அமைச்சரவையுடன் இணக்கமாக துணை நிலை ஆளுநர் செயல்படவேண்டும். எல்லா விஷயங்களிலும் அமைச்சரவைக்கு துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியமில்லை. ஆளுநர், அனைத்து முடிவுகளையும் குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டியதும் இல்லை” என்று நீதிபதி கான்வில்கர் தெரிவித்தார்.
”துணை நிலை ஆளுநர் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு தனிச்சையாக முடிவு எடுக்கமுடியாது. நிலம், காவல்துறை மற்றும் பொது அமைதி ஆகியவை தொடர்பான விஷயங்களில் முழுமையான அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை” என்று 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.மேலும் துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. நிர்வாக அதிகாரம் அனைத்துமே மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது” என்று நீதிபதிகள் கூறினர்.
”உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் படி டில்லி அரசுக்கு மற்ற மாநிலங்களை போல அதிகாரம் கிடையாது. எனினும், டில்லி அரசுக்கு சுயேச்சையான நிர்வாக அதிகாரம் உண்டு. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் முடிவுகளுக்கு துணை நிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்” என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் 3 நீதிபதிகள் பெரும்பான்மையாக தீர்ப்பளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..