சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதி பதவியில் 74 நாட்கள் மட்டுமே இருக்கப் போகும் லலித் – கொஞ்சம் அறிமுகம்!
இந்திய சுப்ரீம் கோர்ட் சீஃப் ஜட்ஜாக கடந்த 16 மாதங்களாக இருந்த என்.வி.ரமணாவின் டூட்டி பீரியட் நேற்றுடன் நிறைவடைந்தது. அவர் ரிட்டயர்ட் ஆனதைத் தொடர்ந்து, இந்திய சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று காலை பதவி ஏற்றுள்ளார். ஜனாதிபதி திரௌபதி முர்மு தமது மாளிகையில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் லலித்திற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த புதிய தலைமை நீதிபதி பதவியில் 74 நாட்கள் மட்டுமே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி லலித் கொஞ்சம் அறிமுகம்
நியூ சீஃப் ஜட்ஜ் யு.யு.லலித்தின் முழுப்பெயர் உதய் உமேஷ் லலித் ஆகும். 1957ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் பிறந்தவர். இவரது தந்தை யு.ஆர். லலித், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகவும், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் இருந்தார்.
தந்தை வழியில் மும்பை அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் படித்த லலித், 1983ம் ஆண்டு ஜூன் மாதம் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். குற்றவியல் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவரான இவர், 1983 முதல் 1985 வரை பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அதைத்தொடர்ந்து, 1986 முதல் 1992 வரை அப்போதைய இந்திய அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியின் வழக்கறிஞர் குழுவில் இருந்தார்.
வழக்கறிஞராக இருந்தபோது, பல முக்கிய பிரமுகர்களின் சார்பாக வழக்காடியுள்ளார். 1994ம் ஆண்டு, பாபர் மசூதி இடிப்பைத் தடுக்கத் தவறியதற்காக நீதிமன்ற அவமதிப்புக் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங்குக்காக ஆஜரானவர் இவர்தான்.
இதேபோல், ஊடகங்களில் அதிகம் பேசப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான், வன உயிரினங்களை வேட்டையாடிய வழக்கில், அவருக்காக வாதிட்டவரும் லலித் தான். ஷொராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்கில் கொலைக் குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவரும், அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுக்காக ஆஜரானவர் இவர்தான்.
இப்படியாக பல முக்கிய வழக்கில் வழக்கறிஞராக வாதிட்ட லலித், கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரலில் சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞராக அங்கீகரிக்கப்பட்டார். காடுகள், வாகன மாசுபாடு, யமுனை நதியின் மாசுபாடு தொடர்பான பல முக்கிய விஷயங்களில் நீதிமன்றத்திற்கு உதவும் வழக்கறிஞராக இவரது சேவையை சுப்ரீம் கோர்ட் பயன்படுத்திக் கொண்டது.
அதன் தொடர்ச்சியாக, 2011ல் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக லலித் நியமிக்கப்பட்டார். அவர் இரண்டு முறை சுப்ரீம் கோர்ட்டின் சட்ட சேவைகள் குழுவின் (SCLSC) உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
2014ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி இவரது சட்டப்புலமை காரணமாக நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் மூலம் கீழமை நீதிமன்றத்திலோ உயர் நீதிமன்றத்திலோ நீதிபதியாக பணியாற்றாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆறாவது நீதிபதி என்ற சிறப்பு லலித்திற்கு கிடைத்தது. கடந்தாண்டு மே மாதம் 14ம் தேதி, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) செயல் தலைவராக நியமிக்கப்பட்டார் லலித்.
பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கும் உரிமை, திருவாங்கூர் அரசக் குடும்பத்தினருக்கு உண்டு என்று தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி லலித் தான். இதேபோல், முத்தலாக் வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் அமர்வில் லலித்தும் இடம்பெற்றிருந்தார்.
அதே சமயம் தான் வழக்கறிஞர் மற்றும் நீதிபதியாக இருந்த காலகட்டத்தில், பல முக்கிய வழக்குகளில் இருந்து திடீரென பாதியிலேயே விலகினார் லலித். இதனால், பாராட்டுகளைப் போலவே பல சர்ச்சைகளிலும் அவர் சிக்கினார்.
உதாரணத்திற்கு 2014ம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி, தூக்கு தண்டனை கைதியான யாகூப் மேமனின் மறுஆய்வு மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து அவர் தன்னை விலக்கிக் கொண்டார். காரணம், வழக்கறிஞராக இருந்தபோதே, அவர், 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேமனை குற்றவாளி என அறிவித்த வழக்கில் அவருக்காக ஆஜராகியிருந்தார்.
இதேபோல், 2015ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி, 2008ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து தன்னைத் தானே விலக்கிக் கொண்டார். காரணம் அந்த வழக்கிலும் அவர் குற்றம்சாட்டப்பட்ட சிலருக்காக ஆஜராகி வாதாடி இருந்தார்.
அயோத்தி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கல்யாண் சிங் சார்பாக கடந்த காலத்தில் அவர் ஆஜராகியிருந்ததால், அயோத்தி உரிமை சர்ச்சை தொடர்பான வழக்கு இவரது அமர்வுக்கு வந்தபோது, அதில் இருந்து 2019ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி யு.யு. லலித் விலகினார். இந்தப் பின்னணியுடன் நீதிபதி லலித், ஆகஸ்ட் 27, 2022 அன்று இந்தியாவின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். இரண்டரை மாதங்களுக்கு தலைமை நீதிபதியாக இவர் பணியாற்றுவார். உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்து தலைமை நீதிபதியாக உயர்கிறார் யு.யு. லலித். இவருக்கு முன்பாக இதேபோல வழக்குரைஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகி தலைமை நீதிபதியாக உயர்ந்தவர் எஸ்.எம் சிக்ரி ஆவார்.