கோர்ட் தீர்ப்பின் பின்னணியை ஆர்.டி.ஐ. சட்டத்தில் தெரிவிக்க முடியாது சுப்ரீம் கோர்ட் தகவல்

நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு அல்லது உத்தரவு எந்த அடிப்படையில் அளிக்கப்பட்டது என்ற தகவலை, தகவல் உரிமை சட்டத்தின்கீழ் தெரிவிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
அண்மையில் ஒரு வழக்கில் எந்த அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டது என்ற விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிவிக்கும்படி வழக்கறிஞர் ரவீந்திர ராஜ் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் தகவல் கேட்டார். அதை தர முடியாது என்று தலைமை பொது தகவல் அலுவலர் தெரிவித்தார். அதையடுத்து மேல்முறையீட்டு ஆணையத்தில் மனு செய்யப்பட்டது. அந்த மனு மீதான எவ்வித விசாரணையும் நடத்தாமல் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டின் மேல்முறையீட்டு ஆணையம்: ” நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்புகள், உத்தரவுகள் மூலம் பேசுகின்றனர். அதனால் எந்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டு அத்தீர்ப்பை நீதிபதி அளிக்கிறார் என்று கேட்டு எவரும் வழக்கு தொடர முடியாது என்று ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் தீர்ப்புக்கான பின்னணி தகவல் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எவரும் தகவலை கேட்க முடியாது என்று மேல்முறையீட்டு ஆணையம் கூறியுள்ளது.