ஊழல் : உலக அளவிலான 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 78வது இடம்!

சர்வதேச அளவில் அழிக்கவே முடியாத அளவில் வியாபித்து போன ஊழல் குறித்தான ரேட்டிங் ஆண்டுதோறும் வருவதும் அதில் நம் நாடு எத்தினியாவது இடம் என்று அறிந்துக் கொண்டு ஓரிரு நாள் அது குறித்து அலசி ஆராய்ந்து விட்டு அப்புறம் மெளனமாகி விடுவதும் வாடிக்கை. அந்த வகையில் தற்போது உலகளவில் ஊழல் மிகுந்த 180 நாடுகளின் பட்டியலில் இந்திய 78வது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்(Transparency International) என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் 180 நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் அந்த நாடுகளின் ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், 2018ம் ஆண்டிற்கான பட்டியல் நேற்று (ஜன.,29) வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் ஊழலற்ற நிர்வாகம் எனற அடிப்படையில் டென்மார்க் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. அதே நேரம் சேமாலியா, சிரியா, தெற்கு சூடான் ஆகிய நாடுகள் கடைசி இடங்களில் உள்ளன.
இதில் குறிப்பிடத்தக்க அமசமாக கடந்த 2017ம் ஆண்டு 81வது இடத்தில் இருந்த இந்தியா 2018ம் ஆண்டில் 78வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், அண்டை நாடுகளான சீனா, 87வது(கடந்தாண்டு 77வது இடம்) இடத்திலும், பாகிஸ்தான் மாறாமல் கடந்த ஆண்டு இருந்த 117வது இடத்திலும் உள்ளதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு கணித்துள்ளது.
அதேசமயம் ஊழல் மிகுந்த டாப் 20 நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. ஊழல் மிகுந்த ஆசிய நாடுகளை பொறுத்தவரை மலேசியா 47 வது இடத்திலும், மாலத்தீவு 31வது இடத்திலும், பாகிஸ்தான் 33வது இடத்திலும், இந்தியா 41வது இடத்திலும் உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.