ஆவின் பால் லிட்டருக்கு ரூ.5 அதிகரிக்கிறது!

தமிழகத்திலுள்ள தனியார் பால் நிறுவனங்கள் கடந்த டிசம்பரில் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 2 விலை உயர்த்தியது. அதன் பிறகு பிப்ரவரி மற்றும் மார்ச்சில் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 2 வீதம் பால் விலை உயர்த்தியுள்ள நிலையில் ஆவின் மூலம் விற்கப்படும் பால் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்கிறது. கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலையை அரசு விரைவில் உயர்த்தி கொடுக்க உள்ளது. இதனால், பொதுமக்களுக்கு விற்கப்படும் பாலின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ. 5 கூடுதலாக கொடுத்து கொள்முதல் செய்கின்றனர். ஆனால், கூட்டுறவு சங்கத்தில் பால் ஊற்றும் உற்பத்தியாளர்களுக்கு தனியாரை விட குறைவாக கொள்முதல் விலை அளிக்கப்படுகிறது. இதனால், கூட்டுறவு சங்கங்களுக்கு பால் ஊற்றும் பால் உற்பத்தியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ‘‘பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால், கூட்டுறவு சங்கங்களுக்கு பால் ஊற்றுவதை நிறுத்தி, தனியார் பால் கொள்முதல் நிலையங்களில் விற்போம்’’ என்று பால் உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர். கூட்டுறவு பால் சங்கங்கள் மூலம் ரூ. 23க்கு பால் கொள்முதல் செய்யும் அரசு, ஆவின் மூலம் பொது மக்களுக்கு ரூ. 24 விற்று வருகிறது. ஆனால், தனியார் பால் நிறுவனங்கள், கூடுதல் விலைக்கு பால் கொள்முதல் செய்து, இருமடங்கு லாபம் வைத்து விற்பனை செய்து வருகின்றன. அதே சமயம், ஆவின் நிர்வாகம் குறைந்த விலையில் மக்களுக்கு பால் வினியோகித்து வருகிறது
பால் உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை ரூ. 5 வரை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொள்முதல் விலை உயர்த்தும் பட்சத்தில், பால் விற்பனை விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் ஆவின் நிர்வாகம் உள்ளது. இது குறித்த இறுதி முடிவை அரசு விரைவில் எடுக்க இருப்பதாக, ஆவின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கொள்முதல் விலை உயரும்பட்சத்தில் ஆவின் பால் விற்பனை விலையும் உயரும். இந்த உயர்வு இம்மாத இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ இருக்கும் என்று தகவல்கள் வெளியாகின்றன